சூப்பர் ஓவரில்' இந்தியா வெற்றி: போராடி வீழ்ந்தது இலங்கை
சூப்பர் ஓவரில்' இந்தியா வெற்றி: போராடி வீழ்ந்தது இலங்கை
UPDATED : செப் 27, 2025 02:16 AM
ADDED : செப் 26, 2025 10:19 PM

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த முக்கியத்துவமில்லாத ஆசிய கோப்பை, 'சூப்பர்-4' போட்டியில் இந்தியா, இலங்கை மோதின. ஏற்கனவே பைனலுக்கு முன்னேறிய நிலையில், இந்திய அணியில் பும்ரா, ஷிவம் துபேவுக்கு 'ரெஸ்ட்' தரப்பட்டது. அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா இடம் பெற்றனர். பைனல் வாய்ப்பை இழந்த இலங்கை அணி, 'டாஸ்' வென்று, 'பவுலிங்' தேர்வு செய்தது.
22 பந்தில் அரைசதம்: இந்திய அணிக்கு துவக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. தீக் ஷனா பந்தில் அவரிடமே 'கேட்ச்' கொடுத்தார் சுப்மன் கில் (4). வழக்கம் போல அதிரடியாக ரன் சேர்த்த அபிஷேக், 22 பந்தில் அரைசதம் எட்டினார். இது தொடர்ந்து இவர் அடித்த 3வது அரைசதம். மந்தமாக ஆடிய சூர்யகுமார் 12 ரன் எடுத்தார்.
அசலங்கா பந்தில் அபிஷேக் சர்மா (61 ரன், 31 பந்து, 8x4, 2x6, ஸ்டிரைக் ரேட் 196.77) அவுட்டானார். சஞ்சு சாம்சன் 39 ரன் எடுத்தார். ஹர்திக் பாண்ட்யா (2) நிலைக்கவில்லை. பின் இணைந்த திலக் வர்மா (49*), அக்சர் படேல் (21*) கைகொடுத்தனர். இந்திய அணி 20 ஓவரில் 202/5 ரன் எடுத்தது.
நிசங்கா சதம்: இலங்கை அணிக்கு நிசங்கா, குசல் மெண்டிஸ் (0) ஜோடி துவக்கம் தந்தது. பின் இணைந்த நிசங்கா, குசல் பெரேரா என இருவரும் அரைசதம் கடக்க, 11 ஓவரில் 130/1 ரன் குவித்தது. தவிர ஆசிய 'டி-20'ல் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன் எடுத்த ஜோடி (2வது விக்கெட்டுக்கு 127 ரன்) ஆனது.
இந்நிலையில் வருண் சக்ரவர்த்தி சுழலில் குசல் பெரேரா (58), 'ஸ்டம்டு' ஆனார். அசலங்கா (5), கமிந்து (3) நிலைக்கவில்லை. நிசங்கா, 52 பந்தில் சதம் கடந்தார். அக்சர் பந்தில் ஷானகா ஒரு சிக்சர் அடிக்க, கடைசி ஓவரில் இலங்கை வெற்றிக்கு 12 ரன் தேவைப்பட்டன.
ஹர்ஷித் ராணா பந்து வீசினார். முதல் பந்தில் நிசங்கா (107) அவுட். அடுத்த 2 பந்தில் 3 ரன் கிடைத்தன. 4, 5வது பந்தில் 2, 4 ரன் எடுத்த ஷானகா (22), கடைசி பந்திலும் 2 ரன் எடுக்க, இலங்கை அணி 20 ஓவரில் 202/5 ரன் எடுத்தது. போட்டி 'டை' ஆனது.
'திரில்' வெற்றி: வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. அர்ஷ்தீப் சிங் பந்து வீசினார். முதல் பந்தில் பெரேரா (0) அவுட்டானார். 4வது பந்து 'வைடு' ஆனது. 5வது பந்தில் ஷானகா (0) ரன் அவுட்டானார். கமிந்து (1) அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை அணி, 0.5 ஓவரில் 2 ரன் மட்டும் எடுத்தது.
பின் களமிறங்கிய இந்திய அணி, 0.1 ஓவரில் 3 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சூர்யகுமார் (3), சுப்மன் அவுட்டாகாமல் இருந்தனர்.
ரன் அவுட் குழப்பம்
சூப்பர் ஓவரில் அர்ஷ்தீப் வீசிய 4 வது பந்தை எதிர்கொண்டார் ஷானகா. பந்தை பிடித்த விக்கெட் கீப்பர் சாம்சன் 'கேட்ச்' கேட்க, அம்பயர் காஜி சோஹல் (வங்கதேசம்) அவுட் கொடுத்தார். மறுபக்கம் ஷானகா ரன் எடுக்க ஓடியதால், சாம்சன் 'ரன் அவுட்' செய்தார். பின் ஷானகா 'ரிவியு' கேட்டார். பந்து பேட்டில் படாதது தெரியவர, தப்பினார்.
இருப்பினும் இந்திய வீரர்கள் ரன் அவுட் கேட்டு முறையிட்டனர். ஆனால், முதலில் அம்பயர் அவுட் கொடுத்து விட்டதால், அந்த பந்து 'டெட் பால்' ஆனதாக அறிவிக்கப்பட்டதால், ரன் அவுட் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதனால் ஷானகா அவுட்டாகாமல் தப்பினார்.
இரண்டாவது அதிகம்
ஆசிய கோப்பை ('டி-20') அரங்கில் இந்தியா, இலங்கை அணிகள் நேற்று இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை (202/5) பதிவு செய்தன. முதலிடத்தில் இந்தியா (212/2, எதிர் ஆப்கன், 2022, துபாய்) தான் உள்ளது.
முதலிடம்
ஒரு ஆசிய கோப்பை தொடரில் (டி-20) அதிக ரன் எடுத்தவரில் முதலிடம் பெற்றார் அபிஷேக் சர்மா. இது வரை 6 இன்னிங்சில் 309 ரன் எடுத்துள்ளார். அடுத்த இடங்களில் ரிஸ்வான் (பாக்., 281 ரன், 6 இன்னிங்ஸ், 2022), கோலி (இந்தியா, 276 ரன், 5 இன்னிங்ஸ், 2022) உள்ளனர்.
* ஒரு டி-20 தொடரில் அதிக ரன் எடுத்த வீரர்களில் (ஐ.சி.சி., முழு அந்தஸ்து பெற்ற அணிகள்) வரிசையில் அபிஷேக் 5வது இடம் பிடித்தார். இம்முறை ஆசிய கோப்பை தொடரில் 309 ரன்(6 இன்னிங்ஸ் எடுத்துள்ளார். முதல் நான்கு இடங்களில் பில் சால்ட்(இங்கி., 331 ரன், 5 இன்னிங்ஸ், எதிர், வெ.இ., 2023), கோலி (319 ரன், 6 இன்னிங்ஸ், 'டி-20' உலக கோப்பை, 2014), தில்ஷன் (இலங்கை, 317 ரன், 7 இன்னிங்ஸ், டி-20 உலக கோப்பை, 2009), ரிஸ்வான் (பாக்., 316 ரன், 6 இன்னிங்ஸ், எதிர், இங்கி., 2022) உள்ளனர்.
* நேற்று 22 பந்தில் அரைசதம் அடித்தார் அபிஷேக் சர்மா. சர்வதேச டி-20 அரங்கில் 50 ரன்களை 25 பந்துகளுக்கு குறைவாக அதிக முறை எடுத்த இந்திய வீரர்களில் இரண்டாவது இடத்தை (தலா 6 முறை) ரோகித் சர்மாவுடன் பகிர்ந்து கொண்டார். முதலிடத்தில் சூர்யகுமார் (7) உள்ளார்.
* சர்வதேச டி-20 அரங்கில் தொடர்ந்து 30+ ரன் எடுத்தவர்களில் முதலிடத்தை ரிஸ்வான், ரோகித் சர்மாவுடன் பகிர்ந்து கொண்டார். மூவரும் 7 முறை இம்மைல்கல்லை எட்டினர்.
* சர்வதேச 'டி-20' அரங்கில் தொடர்ந்து 3 அரைசதம் அடித்த 6வது இந்திய வீரரானார் அபிஷேக்(1). இதற்கு முன் கோலி (3 முறை), ராகுல் (2), சூர்யகுமார் (2), ரோகித் (1), ஷ்ரேயஸ் (1) அசத்தினர்.