வங்கதேசத்தில் தொடரும் தாக்குதல்: ஹிந்துக்கள் போராட்டம்
வங்கதேசத்தில் தொடரும் தாக்குதல்: ஹிந்துக்கள் போராட்டம்
UPDATED : நவ 03, 2024 08:47 AM
ADDED : நவ 03, 2024 08:37 AM

டாக்கா: வங்கதேசத்தில் தொடர்ந்து நடக்கும் தாக்குதல் சம்பவங்களை கண்டித்து, ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மை இன மக்கள் டாக்காவில் பேரணியாக சென்றனர்.
வங்கதேசத்தில் மாணவ அமைப்பினர் போராட்டம் எதிரொலியாக ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்ததன் காரணமாக அங்கு வசிக்கும் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை இன மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது.
இது அவர்கள் இடையே பயத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஐ.நா., உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும், வெளிநாடுகளும் கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து அந்நாட்டு இடைக்கால அரசு, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதி அளித்தது. ஆனால், தாக்குதல் சம்பவங்கள் நிற்கவில்லை. அதேநேரத்தில் துர்கா பூஜை கொண்டாட்டத்தின் போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பூஜை நடக்கும் இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடந்தன.
இதனை கண்டித்து ஹிந்து அமைப்புகள் பேரணி நடத்தினர். அப்போது காவிக்கொடி ஏந்தி சென்றதாக கூறி அவர்கள் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கு அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.இந்நிலையில், தாக்குதல் சம்பவங்களை கண்டித்து டாக்காவில் ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
எங்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல் சம்பவங்களை கட்டுப்படுத்த புதிய சட்டத்தை இயற்றவும், இடைக்கால அரசில் சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ஹிந்து அமைப்பைச் சேர்ந்த சாரு சந்திர தாஸ் என்பவர் கூறுகையில், சிறுபான்மையினர் சந்திக்கும் வேதனைகளை இந்நாட்டின் இடைக்கால அரசு புரிந்து கொண்டதாக தெரியவில்லை. எங்கள் மீதும், வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வீடுகள் மீதும் தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.