ஆஸ்திரேலியாவில் 47 லட்சம் சமூக வலைதள கணக்குகள் நீக்கம்!
ஆஸ்திரேலியாவில் 47 லட்சம் சமூக வலைதள கணக்குகள் நீக்கம்!
ADDED : ஜன 16, 2026 10:20 PM

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் சமூக வலைதள கணக்குகளை குழந்தைகள் பயன்படுத்த கடந்த மாதம் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, 16 வயதுக்கு உட்பட்டோரின், 47 லட்சம் சமூக வலை தள கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளங்களை குழந்தைகள் பயன்படுத்த கடந்த டிசம்பர் 10ல் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.
இந்த சட்டத்தின் படி 16 வயதுக்கு உட்பட்டவர்கள் 'பேஸ்புக், இன்ஸ்டாகிராம், கிக், ரெட்டிட், ஸ்னாப்சாட், த்ரெட்ஸ், எக்ஸ், யுடியூப், டிவிட்ச்' போன்ற 10 சமூகவலைதளங்களில் கணக்கு வைத்திருக்க கூடாது.
அதையும் மீறி கணக்குகள் இருந்தால் சம்மந்தபட்ட நிறுவனங்கள் 300 கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் செலுத்த நேரிடும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில், 'வாட்ஸ் அப்' மற்றும் 'பேஸ்புக் மெசஞ்சர்' போன்றவற்றின் குறுஞ்செய்தி சேவைக்கு குழந்தைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
குழந்தைகளின் வயதைச் சரிபார்க்க, சமூக வலை தளங்கள் அடையாள ஆவணங்களை கோரலாம் அல்லது கணக்கு வைத்திருப்போர் முகத்திற்கு வயது மதிப்பீட்டுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அவர்களது வயதை அறியலாம். இது தவிர ஒரு கணக்கு எவ்வளவு காலமாக பயன்பாட்டில் உள்ளது என்பதை வைத்தும் கண்டறிய அனுமதிக்கப்பட்டது.
இந்தச் சட்டம் பெற்றோர்கள் மற்றும் குழந்தை பாதுகாப்பு ஆர்வலர்கள் மத்தியில் பரவலான வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் குழந்தைகளின் கணக்குகள் என அடையாளம் காணப்பட்ட 47 லட்சம் சமூக வலை தள கணக்குகளை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் நீக்கியுள்ளதாக ஆஸ்திரேலிய தகவல் தொடர்பு அமைச்சர் அனிகா வெல்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

