'இஸ்கான்' அமைப்புக்கு தடை; வங்கதேசம் கோர்ட்டில் மனு
'இஸ்கான்' அமைப்புக்கு தடை; வங்கதேசம் கோர்ட்டில் மனு
UPDATED : நவ 28, 2024 04:15 AM
ADDED : நவ 28, 2024 01:41 AM

டாக்கா, வங்கதேசத்தில் ஹிந்து அமைப்பின் தலைவரை விடுவிக்க வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், அங்கு, 'இஸ்கான்' அமைப்பை தடை செய்யக்கோரி, அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் உள்ள, 'சம்மிலிதா சனாதனி ஜோதே' என்ற ஹிந்து அமைப்பின் தலைவர் சின்மாய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி. இவர், 'இஸ்கான்' எனப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் முன்னாள் நிர்வாகி.
கடந்த மாதம் 30ம் தேதி ஹிந்து அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தின் போது, வங்கதேச தேசிய கொடியை அவமதித்ததாக கிருஷ்ண தாசை சமீபத்தில் அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.
தேச துரோகம் உட்பட 18 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுஉள்ளது. அவரது ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது.
சிட்டங்காங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கிருஷ்ண தாசை, போலீசார் அழைத்து வந்த போது, அவரது ஆதரவாளர்கள் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் அவர்களை போலீசார் கலைத்தனர்.
இந்த போராட்டத்தின் போது நடந்த தாக்குதலில் சைபூல் இஸ்லாம் என்ற வழக்கறிஞர் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், வங்கதேசத்தில் செயல்படும் இஸ்கான் அமைப்பை தடை செய்யக் கோரி, அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், 'சமீபத்திய பிரச்னைகளால் நாட்டை சிலர் சீர்குலைக்க முயல்கின்றனர். ஹிந்து துறவி கைதால் தேவையற்ற பிரச்னைகள், கலவரங்கள் ஏற்பட்டுள்ளன.
'இதற்கு காரணமாக கூறப்படும் இஸ்கான் அமைப்பை தடை செய்ய வேண்டும். அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், சிட்டங்காங், ரங்பூரில் அவசர கால சட்டத்தை பிறப்பிக்க வேண்டும்' என கோரப்பட்டது.
அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் அசாதுஸ்ஸமான், 'சமீபத்தில் நடந்த வன்முறை, கலவரம் குறித்து அரசியல் கட்சியினருடன் அரசு பேச்சு நடத்தி வருகிறது. தேச ஒற்றுமையை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன' என வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், 'இந்த விவகாரம் கவலை அளிக்கிறது. துறவியின் கைதைத் தொடர்ந்து நடந்த போராட்டம் மற்றும் வன்முறை குறித்தும், இஸ்கான் அமைப்பு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அரசு அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டனர்.