எஜமானருக்காக காத்திருந்த நாய்; இணையத்தில் வைரல் ஆன பெல்கா!
எஜமானருக்காக காத்திருந்த நாய்; இணையத்தில் வைரல் ஆன பெல்கா!
UPDATED : டிச 03, 2024 02:54 PM
ADDED : டிச 02, 2024 06:56 PM

மாஸ்கோ: ரஷ்யாவில், ஆற்றில் மூழ்கி இறந்த தனது எஜமானனுக்காக, அவர் மூழ்கிய அதே இடத்தில், அவரது நாய் நான்கு நாட்களாக காத்திருந்த படம், இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஷ்யாவின் பஸ்கோர்ஸ்தான் பிராந்தியத்தில், உபா நதி பாய்கிறது. ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் இந்த நதி உறைந்து போய் விடும். அதில் மக்கள் நடந்து சென்று வருவது வழக்கம்.
அதே ஊரை சேர்ந்த நிக்கோலாய், 59, என்பவர் பனி உறைந்த உபா ஆற்றில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கூடவே அவரது நான்கு வயது நாய் பெல்காவும் வந்தது. திடீரென ஓரிடத்தில், ஆற்றின் உறைவுத்தன்மை மாறி, தண்ணீராக இருந்தது. அதை கவனிக்காத நிக்கோலாய், சைக்கிளில் கடந்து சென்றபோது தவறி விழுந்தார்.
தண்ணீருக்குள் விழுந்த அவரை, கவனித்து மீட்க முயற்சித்தும் முடியவில்லை. அடுத்த சில நாட்களுக்கு பிறகு, ஆற்றில் பல கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டது.
இந்த சம்பவம் நடந்தபோது, நிக்கோலாய் உடன் சென்ற அவரது நாய் பெல்கா, தன் எஜமானர் விழுந்த குழிக்கு அருகிலேயே நான்கு நாட்கள் காத்திருந்தது.உறவினர்கள், நண்ர்கள் எல்லோரும் சென்ற நிலையிலும், நாய் அதே இடத்தில் காத்திருந்ததை கண்ட பலரும் நெகிழ்ச்சி அடைந்தனர். நிக்கோலாயின் குடும்பத்தினர் வந்து அழைத்துச் சென்றபோதும், நாய் திரும்பவும் அதே இடத்துக்கு எஜமானரை தேடி வந்தது.
இறந்து போன எஜமானருக்காக நாய் காத்திருந்த படம், இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இது குறித்த இணைய பதிவில் ஒருவர், 'ஜப்பானிய நாய் ஒன்று தனது உரிமையாளரின் மரணத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் தினமும் ரயில் நிலையத்தில் குறிப்பிட்ட நேரத்தில் அவருக்காக காத்திருந்தது. அதை நினைவுபடுத்துவது போல இந்த சம்பவம் அமைந்து விட்டது,' என்றார்.
நிக்கோலாய் சகோதரர் கூறுகையில், 'நாங்கள் பெல்காவை வீட்டிற்கு அழைத்து சென்றோம். இருந்தாலும் பெல்கா தனது எஜமானரை கடைசியாக பார்த்த இடத்திற்கு திரும்ப திரும்ப வந்து காத்திருக்கிறது. எனது சகோதரர் பெல்காவை எங்கிருந்து வாங்கினார் என்று கூட எனக்கு நினைவில் இல்லை. ஆனால் அவருக்கும் பெல்காவிற்கும் இடையேயான அன்பு பெரியது. அவருடனே இருந்தது.
நான் பெல்காவை எனது இடத்திற்கு அழைத்துச் செல்வேன், ஆனால் நிகோலாய் நினைவை பெல்காவிடம் இருந்து மாற்ற முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.