ADDED : செப் 13, 2026 08:43 PM
குவெட்டா: பாகிஸ்தான் ராணுவ அணிவகுப்பு மீது பி.எல்.ஏ., என்னும் பலுாசிஸ்தான் விடுதலை படை தாக்குதல் நடத்தியதில், 23க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள பலுாசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த பலுாசிஸ்தான் விடுதலை படையினர் நீண்ட நாட்களாக தனிநாடு கோரி உள்நாட்டு போரில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அவ்வப்போது அரசு படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் 20க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியதாக அந்த அமைப்பினர் பொறுப்பேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், லாஸ்பெலா மாவட்டத்தின் நெடுஞ்சாலையில் நேற்று சென்ற பாகிஸ்தான் ராணுவ அணிவகுப்பு வாகனங்களை குறிவைத்து பலுாசிஸ்தான் விடுதலை படையினர் குண்டு வெடிப்பு தாக்குதலை நடத்தினர். இதில், 23க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
