உலகின் அமைதி, வளம் மேம்படுத்துவதில் முக்கிய பங்கு: குடியரசு தினத்துக்கு சீன அதிபர் வாழ்த்து
உலகின் அமைதி, வளம் மேம்படுத்துவதில் முக்கிய பங்கு: குடியரசு தினத்துக்கு சீன அதிபர் வாழ்த்து
UPDATED : ஜன 26, 2026 06:39 PM
ADDED : ஜன 26, 2026 06:26 PM

புதுடில்லி: உலகின் அமைதி, வளத்தை மேம்படுத்துவதில் இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் முக்கிய பங்கு உள்ளது என அதிபர் ஜி ஜின்பிங் குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய குடியரசு தினம், இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களும் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றனர். டில்லியில் நடந்த கண்கவர் விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக்கொடி ஏற்றினார். பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து நடந்த அணிவகுப்பில் இந்திய ராணுவத்தின் வல்லமையை பறைசாற்றும் ஆயுதங்கள், ஏவுகணைகள் இடம்பெற்று இருந்தன.
குடியரசு தினம் முன்னிட்டு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். சீன அதிபர் ஜி ஜின்பிங் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தி:கடந்த ஓராண்டில், இந்தியா, சீனா உறவுகள் மேம்பட்டுள்ளன. உலக அளவில் அமைதி மற்றும் வளத்தை மேம்படுத்துவதில், இரு நாட்டு உறவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.
நல்ல அண்டை நாடாகவும், நட்பு நாடாகவும், பங்குதாரராகவும் இருப்பதே இந்தியாவுக்கும், சீனாவுக்கும் நல்லது என்று தான் நம்புவதாக, சீன அதிபர் தெரிவித்துள்ளார். சீன பிரதமர் லீ கியாங் பிரதமர் மோடிக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பி உள்ளார்.இந்தியா, சீனா உறவு, 2020ல் நடந்த கால்வான் தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு அதல பாதாளத்துக்கு சென்றது. சில ஆண்டுகளாக சீர்கெட்ட நிலையில் இருந்தது, இப்போது மீண்டும் உறவு மேம்படத் தொடங்கியுள்ளது.கடந்தாண்டு சீனாவில் நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதன் மூலம், இரு நாடுகளின் தலைவர்கள் மத்தியில் மீண்டும் உறவுகள் மேம்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில், சீன அதிபர் தெரிவித்துள்ள குடியரசு தின வாழ்த்து, முக்கியத்துவம் பெறுவதாக, அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

