அமெரிக்கா முயற்சி தோல்வியால் உக்ரைனுக்கு ஆதரவாக பிரிட்டன்: ரஷ்யாவுடனான போரை நிறுத்த தீவிரம்
அமெரிக்கா முயற்சி தோல்வியால் உக்ரைனுக்கு ஆதரவாக பிரிட்டன்: ரஷ்யாவுடனான போரை நிறுத்த தீவிரம்
ADDED : மார் 03, 2025 12:13 AM

லண்டன் : உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்ததால், பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் களத்தில் இறங்கி உள்ளன.
ரஷ்யா - -உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளை கடந்து போர் நீடித்து வரும் நிலையில், போரை நிறுத்தும் முயற்சியை அமெரிக்கா துவக்கியது. அதற்கு விலையாக, உக்ரைனில் புதைந்து கிடக்கும் அரிய வகை கனிமங்களை, அமெரிக்கா எடுத்துக் கொள்ளும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டது. அதில், கையெழுத்திட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்ற போது எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.
வெள்ளை மாளிகையில், 45 நிமிடத்திற்கும் மேலாக நீடித்த பேச்சின் இறுதிக் கட்டத்தில், வார்த்தைப் போர் வெடித்தது. அப்போது டிரம்ப், “கட்டளையிடும் நிலையில் நீங்கள் இல்லை. அமெரிக்காவின் ஆதரவு இருந்தால் மட்டுமே, போரில் உக்ரைன் பிழைக்க முடியும்.
“மூன்றாவது உலகப்போரை துாண்டுகிறீர்களா? போர் நிறுத்தத்தில் ஆர்வம் இல்லையா?” என, ஜெலன்ஸ்கியை பார்த்து கோபமாக பேசியதுடன், அவரையும், உக்ரைன் குழுவினரையும் வெள்ளை மாளிகையில் இருந்து உடனே வெளியேறும்படியும் உத்தரவிட்டார்.
உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இச்சம்பவத்தை தொடர்ந்து, மறுநாளே பிரிட்டன் சென்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமரை, லண்டனில் உள்ள பிரதமர் அலுவலக இல்லத்தில் சந்தித்தார்.
ஐரோப்பிய யூனியன் நாடுகளை சேர்ந்த, 10க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம், லண்டனில் நடப்பதற்கு முன், இந்த சந்திப்பு நடந்தது. அப்போது, உக்ரைனுக்கு பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும், புதிதாக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்றும் பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
வெள்ளை மாளிகையில் நடந்தவற்றை யாரும் விரும்பவில்லை. உக்ரைனுக்கு பிரிட்டனும், பிரிட்டன் மக்களும் முழு ஆதரவு அளிக்கிறோம். ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு நாடுகளும் ஒன்று சேர்ந்து உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கும் என்று நம்புகிறேன். போர் நிறுத்தத்தில் விருப்பம் உள்ள ஐரோப்பிய நாடுகள் இதில் முன்வர வேண்டும்.
தற்போது, பிரிட்டன், பிரான்ஸ், கனடா மற்றும் சில நாடுகள் இணைந்து, போர் நிறுத்த வரைவு உடன்படிக்கை ஒன்றை தயார் செய்ததும், அது தொடர்பாக, அமெரிக்காவுடனும் ஆலோசனை நடத்தப்படும். ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீது மீண்டும் போர் தொடுப்பதை தடுக்கும் வகையிலான, எந்தவொரு போர் நிறுத்தத்தையும் அமெரிக்கா ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு நாடுகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், இத்தாலி, துருக்கி மற்றும் நேட்டோ நாடுகளின் தலைவர்கள் லண்டன் சென்றுள்ளனர். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவும் நேற்று லண்டன் சென்றார்.