கனடாவில் தீவிரவாத சக்திகளுக்கு முக்கியத்துவம்: ஜெய்சங்கர் விளாசல்
கனடாவில் தீவிரவாத சக்திகளுக்கு முக்கியத்துவம்: ஜெய்சங்கர் விளாசல்
ADDED : நவ 05, 2024 02:10 PM

கான்பெரா: 'கனடாவில் ஹிந்து பக்தர்கள் மீது காலிஸ்தான் அமைப்பினர் தாக்குதல் நடத்தியது வருத்தம் அளிக்கிறது. நாட்டில் தீவிரவாத சக்திகளுக்கு எப்படி அரசியலில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கான்பெராவில், ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங் மற்றும் ஜெய்சங்கர் நிருபர்களை சந்தித்தனர். அப்போது ஜெய்சங்கர் கூறியதாவது:
கனடா ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளது. கனடாவின் பிராம்ப்டனில் உள்ள ஹிந்து கோவில் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகுந்த கவலை அளிக்கிறது. கனடாவில் ஹிந்து பக்தர்கள் மீது காலிஸ்தான் அமைப்பினர் தாக்குதல் நடத்தியது வருத்தம் அளிக்கிறது. நாட்டில் தீவிரவாத சக்திகளுக்கு எப்படி அரசியலில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.
இது இந்திய சமூகத்தை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே வலுவான உறவு நீடிக்கிறது. உலகத்தில் பல்வேறு நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது. விரைவில் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும். இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.
உரிமை உண்டு
ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறைஅமைச்சர் பென்னி வோங் கூறியதாவது: அமைதியான முறையில் மக்கள் போராட்டம் நடத்தலாம். மக்கள் தங்கள் கருத்துக்களை அமைதியான முறையில் வெளிப்படுத்த வேண்டும். ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள மக்களுக்கு பாதுகாப்பாகவும், மரியாதையாகவும் வாழ்வதற்கு உரிமை உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.