"இந்தியாவால் எங்களுக்கு அச்சுறுத்தல்": கனடா பிரதமர் கண்டுபிடிப்பு
"இந்தியாவால் எங்களுக்கு அச்சுறுத்தல்": கனடா பிரதமர் கண்டுபிடிப்பு
ADDED : ஜூன் 06, 2024 05:05 PM

ஒட்டவா: 'இந்தியாவால் எங்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. எங்களுக்கு அச்சுறுத்தல் தருவதில் சீனா முதலிடத்தில் உள்ளது' என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில், இந்தியர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக, அந்நாட்டு பிரதமர் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், இந்தியாவால் எங்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: கனடாவின் ஜனநாயகத்திற்கு இந்தியா இரண்டாவது பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சீனா அச்சுறுத்தல் தருவதில் முதலிடத்தில் இருக்கிறது. அச்சுறுத்தல் தருவதில் 2வது இடத்தில் இருந்த, ரஷ்யா 3வது இடத்திற்கு சென்றுள்ளது. கனடாவின் அரசியல் கட்சி தலைவர்கள் வெளிநாட்டு சக்திகளால் செல்வாக்கு பெற்றிருக்கலாம். வெளிநாட்டு தூதர்களுடன் ரகசியத் தகவல்களைப் பகிர்ந்திருக்கலாம். இவ்வாறு ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். இந்த தகவலை அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில், இந்தியா மீது குற்றம் சுமத்திய போது, ஆதாரமற்றவை என மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது. அதுமட்டுமின்றி, 'இந்திய விவகாரங்களில் கனடா அரசு தலையிடுகிறது. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறது' என இந்தியா பதிலடி கொடுத்து இருந்தது.