கட்சித் தலைவர் பதவி; ராஜினாமா செய்கிறார் கனடா பிரதமர்
கட்சித் தலைவர் பதவி; ராஜினாமா செய்கிறார் கனடா பிரதமர்
ADDED : ஜன 06, 2025 09:17 AM

ஒட்டாவா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து இன்றோ அல்லது நாளையோ பதவி விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச அரங்கில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உள்நாட்டிலும் பிரச்னைகளை சந்தித்து வருகிறார். ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்று அவரது சொந்த கட்சியான லிபரல் கட்சி எம்.பி.,க்களே போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இவர் மீண்டும் கனடா தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல், ட்ரூடோவை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, வேறு ஒருவரை நியமிப்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர். மேலும்,ட்ரூடோவின் அரசுக்கு ஆதரவு கொடுத்து வந்த என்.டி.பி., கட்சியும் ஆதரவை விலக்கி கொண்டது. மேலும், அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அழைப்பு விடுத்தது.
இந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, , லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து இன்று விலக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது உறுதிப்படுத்தப்படாத நிலையில், வரும் 8ம் தேதி கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் கூடுகிறது. அதற்குள் அவர் பதவி விலக இருப்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் வரையில் அவர் பிரதமர் பதவியில் நீடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.