போர் நிறுத்த ஒப்பந்தம் எதிரொலி; 4 பிணைக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ்
போர் நிறுத்த ஒப்பந்தம் எதிரொலி; 4 பிணைக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ்
UPDATED : ஜன 25, 2025 05:10 PM
ADDED : ஜன 25, 2025 06:57 AM

ஜெருசலேம்: 2ம் கட்டமாக இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்த நான்கு பெண் வீராங்கனைகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசா உள்ளிட்ட பாலஸ்தீன பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே, 2023, அக்., 7ல் போர் துவங்கியது. அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகியவற்றின் மத்தியஸ்த முயற்சியால், போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.
இதன்படி, ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடித்துச்சென்ற பிணைக் கைதிகளை விடுவிக்கவும், அதற்காக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவிக்கவும் முடிவு செய்யப்பட்டது. முதலாவதாக, ஹமாஸ் தரப்பில் இருந்த பிணைக் கைதிகள் எமில் டமாரி, ரோமி கோனென், டோரன் ஸ்டேய்ன்பிரெச்சர் ஆகிய மூன்று பெண்களை, காசாவில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஹமாஸ் படையினர் ஒப்படைத்தனர்.
இதைத் தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட அவர்கள், தங்கள் சொந்த ஊர் சென்றனர். மொத்தம் 42 நாட்கள் அமலில் இருக்கும் இந்த போர் நிறுத்தத்தின் போது, மேலும் 33 இஸ்ரேலிய பிணைக் கைதிகளும், 2,000 பாலஸ்தீன கைதிகளும் அடுத்தடுத்து விடுவிக்கப்பட உள்ளனர்.
இந்நிலையில், இன்று (ஜன.,25) 2ம் கட்டமாக விடுதலை செய்யப்பட உள்ள பிணைக்கைதிகள் 4 பேரின் பெயர் பட்டியலை ஹமாஸ் வெளியிட்டது.
இது குறித்து இஸ்ரேல் ராணுவம் கூறியதாவது: 2வது கட்டமாக 4 பெண்கள் பட்டியலை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. இவர்கள் அனைவரும் இஸ்ரேல் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, நாமா லெவி (20), டேனியலா கில்போவா (20), லிரி அல்பாக் (19), கரினா அரிவ் (20) ஆகியோரை ஹமாஸ் அமைப்பினர் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைத்தனர்.