சிலி நாட்டில் பரவும் காட்டுத்தீ; அவசரநிலை அறிவித்த அதிபர்
சிலி நாட்டில் பரவும் காட்டுத்தீ; அவசரநிலை அறிவித்த அதிபர்
ADDED : பிப் 10, 2025 04:25 AM
சான்டியாகோ; சிலி நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீ பல்வேறு இடங்களில் பரவி வரும் நிலையில், அந்நாட்டு அதிபர் கேப்ரியல் போரிக் அவசர நிலையை அறிவித்தார். இரவு நேரங்களில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடான சிலியின் நுபல், மவுலி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக 40 டிகிரி செல்ஷியஸ் கடந்து வெப்பம் பதிவாகி வருகிறது.
இதன் காரணமாக, இங்குள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. அப்பகுதியில் வேகமான காற்று வீசுவதால், மற்ற இடங்களிலும் தீ மளமளவென பரவி வருகிறது.
வனத்துறையினர், மீட்புக்குழு உதவியுடன் தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, சிலி நாட்டு அதிபர் கேப்ரியல் போரிக், காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள நுபல், மவுலி ஆகிய பகுதி களில் அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளார்.
இதேபோல் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்து உள்ளார்.
இதுகுறித்து அதிபர் கேப்ரியல் போரிக் கூறுகையில், “இந்த காட்டுத்தீயானது இயற்கையாக பரவவில்லை. திட்டமிட்டு தீ வைத்துள்ளனர்.
''இதற்கு காரணமான நபர்களை கண்டறிந்து, கடும் தண்டனை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். தற்போது, 15 இடங்களில் காட்டுத்தீ பரவி உள்ளது. அது மேலும் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
கடந்த ஆண்டு சிலி நாட்டின் வால்பாரிசோ மாகாணத்தில் பரவிய காட்டுத்தீயில் சிக்கி, 136 பேர் பலியாகினர்; 6,600க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகின.

