ஆண்டுதோறும் 25 மில்லியன் மெட்ரிக் டன் சோயாபீன்ஸ்களை இறக்குமதிக்கு சீனா ஒப்புதல்; அமெரிக்கா அறிவிப்பு
ஆண்டுதோறும் 25 மில்லியன் மெட்ரிக் டன் சோயாபீன்ஸ்களை இறக்குமதிக்கு சீனா ஒப்புதல்; அமெரிக்கா அறிவிப்பு
ADDED : அக் 30, 2025 07:58 PM

வாஷிங்டன்: ஆண்டுதோறும் 25 மில்லியன் மெட்ரிக் டன் அமெரிக்க சோயாபீன்களை வாங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
அமெரிக்கா - சீனா இடையே வர்த்தகம் தொடர்பான மோதல் நீடித்து வருகிறது. இதனால், பரஸ்பரம் இறக்குமதி பொருட்களுக்கு அதிக வரி விதித்துள்ளனர். அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு குறிப்பாக சோயாபீன்ஸ்க்கு, சீனா அதிக வரியை விதித்தது.அமெரிக்க சோயாபீன்ஸ் உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கும் கொள்முதல் விலை குறைந்தது. இதனால் அமெரிக்க விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, 'இந்த விவகாரம் தொடர்பாக சீன அதிபர் ஜி ஜின் பிங்கை சந்தித்து பேசுவேன். சோயாபீன்ஸ் தான் முக்கிய விவாதப் பொருளாக இருக்கும்' என அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.இந்நிலையில் இன்று (அக்டோபர் 30) தென்கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அதிபர் டிரம்ப் சந்தித்து பேசினார்.
இந்நிலையில், ஆண்டுதோறும் 25 மில்லியன் மெட்ரிக் டன் அமெரிக்க சோயாபீன்களை வாங்க சீனா ஒப்புக்கொண்டது என அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்தார். இதன் மூலம் அமெரிக்க விவசாயிகளுக்கு பெரும் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.
மேலும் ஸ்காட் பெசென்ட் கூறியதாவது: அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் 25 மில்லியன் மெட்ரிக் டன் அமெரிக்க சோயாபீன்ஸ்களை வாங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது. சீனா இப்போது முதல் ஜனவரி வரை அமெரிக்காவிலிருந்து 12 மில்லியன் மெட்ரிக் டன் சோயாபீன்ஸ்களை வாங்கத் தொடங்கும், என்றார்

