கருத்து வேறுபாடுகளை சுமுகமாக கையாள இந்தியாவுக்கு சீனா அழைப்பு
கருத்து வேறுபாடுகளை சுமுகமாக கையாள இந்தியாவுக்கு சீனா அழைப்பு
ADDED : செப் 11, 2026 10:18 PM

பீஜிங்: 'பிரிக்ஸ்' உச்சி மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஷீ ஜின்பிங் இன்று டில்லி வர உள்ள நிலையில், 'இரு நாடுகளும் கருத்து வேறுபாடுகளை சுமுகமாக கையாண்டு, நீண்ட கால பார்வையுடன் உறவுகளை அணுக வேண்டும்' என சீனா தெரிவித்துள்ளது.
டில்லியில், பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு நாளை நடக்கிறது. இதில் பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்க, சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஏழு ஆண்டுகளுக்கு பின், இன்று நம் நாட்டுக்கு வருகிறார். மாநாட்டிற்கு இடையே பிரதமர் மோடியை சந்தித்து பேச்சு நடத்த உள்ளார். இந்த சந்திப்பு, இந்தியா - சீனா உறவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபரில், ரஷ்யாவின் கசான் நகரில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டின் போது பிரதமர் மோடியும், அதிபர் ஷீ ஜின்பிங்கும் நேரில் சந்தித்து பேசினர். பின், இந்த ஆண்டு சீனாவின் தியான்ஜினில் இருவரும் சந்தித்தனர். தொடர்ந்து, மூன்றாவது முறையாக இன்று இரு தலைவர்களும் சந்திக்க உள்ளனர்.
மோடி - ஜின்பிங் சந்திப்பு குறித்து, சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறியதாவது: இரு நாடுகளின் தலைவர்கள் வழங்கியுள்ள துாதரக வழிகாட்டுதலின்படி சீனா செயல்படும். இரு தரப்பு உறவுகளை நீண்ட கால மற்றும் துாதரக பார்வையில் அணுகுவோம். இரு நாடுகளுக்கும் இடையிலான தகவல் தொடர்பை அதிகரித்து, ஒத்துழைப்பை மேம்படுத்துவோம்.
கருத்து வேறுபாடுகளை நாம் முறையாக கையாள வேண்டும். நல்ல அண்டை நாடுகளாக நட்புறவை பேணுவதுடன், ஒருவருக்கொருவர் வெற்றி பெற உதவும் வகையில் இந்தியாவும், சீனாவும் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
