சீனாவில் தொடரும் சோகம்; பட்டாசு கடை வெடிவிபத்தில் 12 பேர் உடல்சிதறி பலி
சீனாவில் தொடரும் சோகம்; பட்டாசு கடை வெடிவிபத்தில் 12 பேர் உடல்சிதறி பலி
ADDED : பிப் 18, 2026 05:36 PM

பீஜிங்: சீனாவில் பட்டாசு கடை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
சீனாவின் மத்திய ஹூபே மாகாணத்தில் சியாங்யாங் நகரில் ஒரு பட்டாசுக்கடை உள்ளது. அங்கு பட்டாசுகளை வாங்க ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசுகளில் சில வெடித்துச் சிதறின.
பட்டாசுகளில் இருந்து சிதறிய தீப்பொறிகள், கடையில் இருந்த மற்ற பட்டாசுகளின் மீது விழ, அவை பலத்த சத்தத்துடன் வெடித்தன. என்ன நடக்கிறது என்பதை அறியமுடியாத சூழலில் அங்கே திரண்டு இருந்தவர்கள் நாலாபுறமும் பீதியில் சிதறி ஓடினர்.
தகவலறிந்த சம்பவ பகுதிக்கு பேரிடர் மீட்புப்படையினர் விரைந்து வந்தனர். தீயை கடும் போராட்டத்திற்கு பின்னர் கட்டுப்படுத்திய அவர்கள், 12 சடலங்களையும் கண்டெடுத்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. இதுகுறித்து அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ள சூழலில் இதுபோன்ற வெடிவிபத்து அங்கு நடப்பது 2வது முறையாகும். சில நாட்கள் முன்பு, கிழக்கு ஜியாங்க் மாகாணத்தில் உள்ள பட்டாசு கடையில் இதேபோன்று வெடிவிபத்து நிகழ அங்கு 6 பேர் கொல்லப்பட்டனர்.

