ADDED : மார் 04, 2026 03:40 AM
பீஜிங்: மேற்கு ஆசியாவில் ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தும்படி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை சீனா வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்கா- - இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக பெரிய அளவிலான தாக்குதல்களைத் துவங்கியுள்ளன. ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உடன் தொலைபேசியில் பேசினார். அராக்சி ஈரானின் சமீபத்திய நிலவரங்களை அவருக்கு விளக்கினார்.
இதை தொடர்ந்து, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ கூறியதாக, அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாட்டை காப்பதற்கு சீனா ஆதரவு அளிக்கும். அமெரிக்காவும் இஸ்ரேலும் உடனடியாக ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். பதற்றத்தை அதிகரிப்பதைத் தவிர்த்து, மோதல் மேற்கு ஆசியா முழுதும் பரவாமல் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

