அமெரிக்காவுக்கு புழுக்கள் கடத்திய சீன விஞ்ஞானி அதிரடி கைது
அமெரிக்காவுக்கு புழுக்கள் கடத்திய சீன விஞ்ஞானி அதிரடி கைது
ADDED : ஜூன் 11, 2025 06:47 AM
டெட்ராய்ட் : அமெரிக்காவுக்கு குடல் புழுக்களை கடத்தி வந்த சீன விஞ்ஞானியை எப்.பி.ஐ., எனப்படும் புலனாய்வு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலையில் ஓராண்டு ஆய்வுப் படிப்பிற்காக சீனாவைச் சேர்ந்த செங்ஸுவான் ஹான் என்ற இளைஞர் அமெரிக்காவுக்கு நேற்று முன்தினம் வந்தார்.
மிச்சிகனின் டெட்ராய்ட் விமான நிலையம் வந்த இவரிடம், அமெரிக்காவுக்குள் அனுமதி பெற்று இறக்குமதி செய்ய வேண்டிய குடல் புழுக்கள் இருந்தன.
அனுமதி பெறாமல் கொண்டு வந்ததால் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த, புழுக்கள், மிச்சிகன் பல்கலை ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இவர் சீனாவின் வூஹானில் உள்ள ஹுவாசாங் அறிவியல் பல்கலையில் ஆராய்ச்சி பட்டம் படித்தவர். மாணவர்களுக்கான ஜெ. - 1 விசாவில் அமெரிக்காவுக்கு வந்தார்.
இவர், கடந்தாண்டு செப்டம்பர் முதல் இந்தாண்டு மார்ச் வரை இதுபோல் நான்கு மாதிரிகளை அமெரிக்காவுக்கு அனுப்பியதும் தெரியவந்தது.
அவரின் மொபைலை போலீசார் கைப்பற்றி பார்த்தபோது, ஆவணங்கள் அழிக்கப்பட்டிருந்தன.
இதேபோல் சில நாட்களுக்கு முன், வேளாண் பயிர்களில் கதிர் கருகல் நோயை ஏற்படுத்தி கடும் சேதத்தை விளைவிக்கும் பூஞ்சை கிருமியை எடுத்த இரு சீன விஞ்ஞானிகள் எப்.பி.ஐ.,யினரால் கைது செய்யப்பட்டனர்.