எல்லை தாண்டிய பயங்கரவாத பிரச்னை: இந்தியாவுக்கு சீனா முழு ஆதரவு: மோடி - ஜின்பிங் வலியுறுத்தல்
எல்லை தாண்டிய பயங்கரவாத பிரச்னை: இந்தியாவுக்கு சீனா முழு ஆதரவு: மோடி - ஜின்பிங் வலியுறுத்தல்
UPDATED : செப் 01, 2025 10:53 PM
ADDED : செப் 01, 2025 12:53 AM

தியான்ஜின்: இந்தியா மற்றும் சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், அவர்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பும் வகையில், சீனாவில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு இடையே பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷீ ஜின்பிங்கும் நேற்று சந்தித்து பேசினர்.
வரவேற்பு சீனாவின் தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நேற்று துவங்கியது.
இது இன்று நிறைவு பெறுகிறது. இந்த அமைப்பில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
பிரதமர் மோடி கடைசியாக 2018ல் சீனாவின் வூஹானுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். அதன்பின் கொரோனா தொற்று, லடாக்கின் கல்வான் எல்லையில் இந்திய - சீன வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் போன்ற காரணங்களால் பிரதமர் சீனாவுக்கு செல்வதை தவிர்த்தார். அதன் பின் இரு நாடுகளும் எல்லை பிரச்னைக்கு பேச்சு நடத்தி தீர்வு காண முன் வந்தன.கடந்த 2022ல் தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் பாலியில் ஜி - 20 உச்சி மாநாடு நடந்தது.
எல்லை பிரச்னைக்கு பின் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் இதில் முதல் முறையாக நேரில் சந்தித்து பேசினர். இது இரு தரப்பு உறவை சீரமைத்தது. இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரியை விதித்தார். சீனாவுக்கு பொருளாதார பற்றாக்குறையை காரணம் காட்டி, இதே அளவு வரி விதித்தார்.
செய்தி 'இந்த வரி விதிப்பு இந்தியா - சீனாவை நெருக்கமாக்கும், அமெரிக்க வெளியுறவு கொள்கையின் மிகப்பெரிய வீழ்ச்சி இது' என, அந்நாட்டின் அரசியல் நிபுணர்கள் கடந்த சில நாட்களாக கருத்து தெரிவித்து வந்தனர். அவர்கள் கணிப்பின்படியே சீனாவில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி தற்போது பங்கேற்று உள்ளார். அவரை அதிபர் ஷீ ஜின்பிங் சந்தித்து பேச்சு நடத்தினார்.
இந்த விரிவான பேச்சில் இருதரப்பு உறவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்து இரு தலைவர்களும் வெளிப்படையாக பேசினர். இது அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட செய்தியாக பார்க்கப்படுகிறது. ''பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பின்போது, எல்லை தாண்டிய பயங்கரவாத பிரச்னை குறித்து விவாதிக் கப்பட்டது. இதில் இந்தியாவுக்கு சீனா முழு ஆதரவு தெரிவித்தது,'' என நம் வெளியுறவு துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.