இலங்கை கோர்ட்டில் தாதா சுட்டுக்கொலை:ராணுவ உளவுப்பிரிவு வீரர் கைது!
இலங்கை கோர்ட்டில் தாதா சுட்டுக்கொலை:ராணுவ உளவுப்பிரிவு வீரர் கைது!
ADDED : பிப் 19, 2025 10:14 PM

கொழும்பு: இலங்கை கோர்ட்டில் பிரபல நிழல் உலக தாதா சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், அந்நாட்டு ராணுவ உளவுப்பிரிவை சேர்ந்த முகமது அஸ்மன் ஷெர்புதீன் என்பவர் புத்தளம் அருகே கைது செய்யப்பட்டார்.
இலங்கையில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த நிழல் உலக தாதா
கணேமுல்லே சஞ்சீவாவை,சிறப்புப் படையினர் இன்று கொழும்பில் உள்ள கோர்ட்டுக்கு அழைத்து வந்திருந்தனர். கோர்ட்டின் உள்ளே அவன் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தனிப்படை போலீசார், கோர்ட்டிற்கு வெளியே பாதுகாப்புக்காக நின்றிருந்தனர்.
சஞ்சீவா, கூண்டில் இருந்தபோது, மிக அருகில் இருந்து வழக்கறிஞர் போல் இருந்த ஒருவரால் சுடப்பட்டான்.
பலத்த காயமடைந்த சஞ்சீவா ஒரு பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு அவன் இறந்துவிட்டதாக தேசிய மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ருக்ஷன் பெல்லானா தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட ஒரு ரிவால்வரை போலீசார் மீட்டனர்.
சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு கொலையாளியை போலீசார் புத்தளம் அருகே கைது செய்தனர்.
இலங்கை ராணுவத்தின் உளவுப் பிரிவில் வேலை பார்த்த முகமது அஸ்மன் ஷெர்புதீன் தான் அந்த கொலையாளி என்பது விசாரணையில் தெரியவந்தது.
முகமது அஸ்மன் ஷெர்புதீன் ஏழு கொலை வழக்குகளில் தேடப்படும் நபர்; என்ன காரணத்துக்காக நிழல் உலக தாதாவை அவர் சுட்டுக் கொன்றார் என தீவிர விசாரணை நடந்து வருகிறது.

