UPDATED : செப் 24, 2025 07:28 PM
ADDED : செப் 24, 2025 07:27 PM

வாஷிங்டன்: அமெரிக்காவின் டல்லாஸ் நகர குடியேற்ற அலுவலகத்தில், மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் டல்லாஸில் உள்ள குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்க அலுவலகத்தில் மர்ம நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதும், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்தனர். அதற்குள் அங்கு ரத்த வெள்ளத்தில் மூவர் பலியாகி விட்டிருந்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார். இதில் அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலையாளியின் அடையாளத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை.
துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.சமீபகாலமாக அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த செப்டம்பர் 21ம் தேதி, இண்டியானாபோலிஸில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.