ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 1,400 தாண்டியது
ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 1,400 தாண்டியது
ADDED : செப் 03, 2025 06:23 AM
காபூல் : ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை, ஆயிரத்து 411ஆக உயர்ந்துள்ளது; 3,500 பேர் காயமடைந்துள்ள நிலையில், 5,00க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் கிழக்கு மற்றும் பாக்., எல்லையை ஒட்டிய பகுதிகளில் கடந்த, ஆக., 31ம் தேதி நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் பதிவான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக இருந்த நிலையில், அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
குனார் மாகாணத்தில் மிக மோசமான அழிவு ஏற்பட்டது. மூன்று கிராமங்கள் அங்கு தரைமட்டமாயின.
இந்த நிலநடுக்கத்தில், 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பலி எண்ணிக்கை, 1,411ஆக உயர்ந்துள்ளதாக, ஆப்கானிஸ்தானை நிர்வகிக்கும் தலிபான் பயங்கரவாத அமைப்பு நேற்று தெரிவித்துள்ளது.
மேலும், 3,50-0க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகள், மலைப்பாங்கானவை என்பதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதேநேரம், பாதிக்கப்பட்டவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கிடையில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், காபூலுக்கு 1,000 தங்கும் கூடாரங்களை வழங்கியுள்ளதாகக் கூறினார். குனாருக்கு 15 டன் உணவுப் பொருட்களை அனுப்பி வருவதாகவும், தொடர்ந்து கூடுதல் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார்.
2021ல் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து ஏற்பட்ட மூன்றாவது பெரிய நிலநடுக்கம் இதுவாகும். ஏற்கனவே பொருளாதார நெருக்கடி உள்ள நிலையில், இந்த நிலநடுக்கம் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளின் உதவியை தலிபான் கோரியுள்ளது.