உறை பனியில் உறைந்த சடலமாக மீட்கப்பட்ட இந்திய மாணவர்: மரணத்திற்கு காரணம் என்ன?
உறை பனியில் உறைந்த சடலமாக மீட்கப்பட்ட இந்திய மாணவர்: மரணத்திற்கு காரணம் என்ன?
ADDED : பிப் 23, 2024 01:30 PM

வாஷிங்டன்: அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலையில் கடந்த மாதம் பனியில் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளி மாணவரின் மரணத்திற்கான காரணம் தெரியவந்துள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அகுல் தவான் (18) என்ற மாணவர், இல்லினாய்ஸ் பல்கலையில் படித்து வந்தார். கடந்த மாதம் 20 ம் தேதி அவர் மாயமான நிலையில், பல மணி நேர தேடுதலுக்கு பல்கலை அருகே சடலமாக மீட்கப்பட்டார். ஹைபோதெர்மியா காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில், உறுதியான காரணம் குறித்து தெரியாமல் இருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பல்கலை அதிகாரி ஒருவர் கூறுகையில், அதிகமான ஆல்கஹால் உட்கொண்டது மற்றும் உறைபனியில் இருந்தது போன்ற காரணங்களால் உயிரிழந்தார் என கூறியிருந்தார். தற்போது, அகுல் தவான் மரணத்திற்கான காரணம் குறித்து தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், ஜன.,20ம் தேதி அகுல் தவான், நண்பர்களுடன் சேர்ந்து வெளியில் சென்று மது அருந்தி உள்ளார். பிறகு இரவு 11:30 மணியளவில் அவர்கள், பல்கலை அருகில் உள்ள கிளப் ஒன்றுக்கு சென்றனர். அங்கிருந்த ஊழியர்கள், அகுல் தவானை உள்ளே விட அனுமதி மறுத்தனர். பல முறை உள்ளே சென்றும், அவரை அனுமதிக்க ஊழியர்கள் சம்மதிக்கவில்லை. இந்த காலகட்டத்தில் இல்லினாய்ஸ் கடும் உறைபனி நிலவும் காலம். வெப்பநிலை மைனஸ் 20 முதல் மைனஸ் 30 டிகிரி வரை நிலவும்.
கிளப்பிற்கு உள்ளே, அனுமதி கிடைக்காததால் சோகத்தில் இருந்த அகுல் தவானை வீட்டிற்கு செல்ல வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆனால், அந்த வாகனத்தில் செல்ல மறுத்துவிட்டார். பிறகு அவரை காணவில்லை. நண்பர்கள், அகுல் தவானை, பல முறை தொடர்பு கொண்டும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து நண்பர்களில் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். பிறகு, பல்கலை அருகே அகுல் தவான் இறந்த நிலையில் உள்ளதாக ஊழியர் ஒருவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். போலீசார் சென்று உடலை கைப்பற்றினர். அதிக மது அருந்தியது மற்றும் அதிக குளிரான சூழ்நிலையில் அதிகம் இருந்தது ஆகியவையே காரணம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சான்பிரான்சிஸ்கோவில் வசித்து வரும் அகுல் தவானின் பெற்றோர் கூறுகையில், காணாமல் போன உடனையே போலீசார் எங்களது மகனை கண்டுபிடிக்காமல், 10 மணி நேரத்திற்கு பிறகே கண்டுபிடித்தனர். காணாமல் போன இடத்திற்கும், கண்டுபிடித்த இடத்திற்கும் இடையே 400 அடி தூரம் தான் இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.