கிரீன்லாந்தை கைப்பற்ற திட்டமா? அதிபர் டிரம்புக்கு டென்மார்க் கடும் எச்சரிக்கை
கிரீன்லாந்தை கைப்பற்ற திட்டமா? அதிபர் டிரம்புக்கு டென்மார்க் கடும் எச்சரிக்கை
ADDED : ஜன 09, 2026 10:08 AM

கோபன்ஹேகன்: கிரீன்லாந்தை கைப்பற்றுவதாக அதிபர் டிரம்ப் மிரட்டிய சில நாட்களுக்கு பிறகு டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டென்மார்க்கின் தன்னாட்சி பெற்ற பிரதேசமான கிரீன்லாந்தை அதிபர் டிரம்ப் , பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்கா உடன் இணைத்துக் கொள்ள வேண்டும் எனக்கூறி வருகிறார். இது தொடர்பாக டிரம்ப் அளித்த பேட்டி ஒன்றில் அமெரிக்காவின் பாதுகாப்பு ரீதியாக கிரீன்லாந்து இப்போது மிக முக்கியப் புள்ளியாக இருக்கிறது.
கிரீன்லாந்து முழுவதும் ரஷ்யா மற்றும் சீன கப்பல்கள் உள்ளன . அதனால் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தப் பகுதியை அமெரிக்கா உடன் இணைப்பது அவசியம், என்றார். இதற்கு உலக நாடுகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இது குறித்து டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் கூறியதாவது: நேட்டோ கூட்டமைப்பின் ஒப்பந்தத்தின்படி உறுப்பு நாடுகள் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தக்கூடாது. ஏதாவது ஓர் உறுப்பினருக்கு ஆபத்து என்றால் ஒட்டு மொத்த நேட்டோ நாடுகளும் களமிறங்கும். அமெரிக்கா மற்றொரு நேட்டோ நாட்டை ராணுவ ரீதியாக தாக்க முடிவு செய்தால், எல்லாம் பாதியில் நின்றுவிடும்.
இதை ஒருபோதும் ஏற்க மாட்டோம். வெனிசுலா நாட்டுடன் கிரீன்லாந்தை ஒப்பிட முடியாது. ஒரு வேளை கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றினால் நேட்டோ கூட்டமைப்பு உடைந்து சிதறும். முதலில் சுடுவேன், பின்னர் கேள்விகளை கேட்பேன்.
யாராவது டென்மார்க் பிரதேசத்தை ஆக்கிரமித்தால், அதன் வீரர்கள் உடனடியாக சண்டையில் ஈடுபடுவார்கள். தங்கள் தளபதிகளின் உத்தரவுக்காக காத்திருக்காமல் துப்பாக்கிச் சூடு நடத்துவார்கள். இவ்வாறு மெட்டே பிரடெரிக்சன் கூறினார்.

