அமெரிக்க நெருக்கடி எதிரொலி: வெனிசுலாவிலிருந்து வெறுங்கையுடன் திரும்பும் சீன எண்ணெய் கப்பல்கள்
அமெரிக்க நெருக்கடி எதிரொலி: வெனிசுலாவிலிருந்து வெறுங்கையுடன் திரும்பும் சீன எண்ணெய் கப்பல்கள்
ADDED : ஜன 14, 2026 06:42 AM

பீஜிங்: கச்சா எண்ணெய்க்காக வெனிசுலா நோக்கி சென்ற, இரு பிரமாண்ட சீன எண்ணெய் கப்பல்கள், தன் பயணத்தை ரத்து செய்து விட்டு, மீண்டும் நாடு திரும்புகின்றன.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவுக்குள், அதிரடியாக நுழைந்த அமெரிக்க ராணுவம், அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியாவை, போதைப் பொருள் கடத்தலுக்கு உதவிய குற்றத்துக்காக, கடந்த 3ம் தேதி கைது செய்து அமெரிக்க சிறையில் அடைத்தது.
இதையடுத்து, அந்நாட்டின் துணை அதிபரான டெல்சி ரோட்ரிக்ஸ், இடைக்கால அதிபராக பதவியேற்றுக் கொண்டார். வெனிசுலா நாட்டின் எண்ணெய் வளங்களை, அமெரிக்கா தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்து வருகிறது. இதன்படி, வெனிசுலா கச்சா எண்ணெயை எந்தெந்த நாடுகளுக்கு வினியோகிப்பது என்ற முடிவுகளை அமெரிக்கா எடுத்து வருகிறது.
இந்நிலையில், வெனிசுலாவுடன் மேற்கொள்ளப்பட்ட நீண்டகால கடன் மற்றும் எண்ணெய் ஒப்பந்தங்களின் கீழ், கச்சா எண்ணெய் பெறுவதற்காக, 'ஷிங் யே மற்றும் தவுசன்டு சன்னி' என்ற இரு சீன கப்பல்கள், அட்லாண்டிக் கடலில் கடந்த சில வாரங்களா க நிறுத்தப்பட்டிருந்தன.
ஆனால், கடந்த வாரம் ரஷ்ய கப்பல்கள் சிறை பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சீன கப்பல்கள் வெனிசுலா கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்வதை தவிர்த்து, மீண்டும் சீனா திரும்புவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதேபோன்று, வெனிசுலாவுக்கு பாதுகாப்பு சேவைகளை வழங்கி எண்ணெய் மற்றும் பணம் பெற்றுக் கொண்டிருந்த கியூபாவுக்கும், இனி கச்சா எண்ணெய் மற்றும் பணம் கிடையாது என சமீபத்தில் டிரம்ப் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

