ஏட்டிக்குப் போட்டி பேசிய எக்ஸ் அதிபர் எலான் மஸ்க்: பார்சல் செய்து பந்தாடியது பிரேசில்
ஏட்டிக்குப் போட்டி பேசிய எக்ஸ் அதிபர் எலான் மஸ்க்: பார்சல் செய்து பந்தாடியது பிரேசில்
UPDATED : செப் 01, 2024 03:57 PM
ADDED : ஆக 31, 2024 08:41 AM

புதுடில்லி: பிரேசிலில் எக்ஸ் சமூகவலைதளம் செயல்பட தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 'பிரேசிலில் ஜனநாயகத்தை அழிக்க முயற்சிக்கின்றனர்' என எலான் மஸ்க் கோபமாக பதில் அளித்தார்.
பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை உலகின் பெரிய பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார். பெயரை எக்ஸ் என மாற்றினார். லோகோவில் இருந்த குருவி படத்தை மாற்றினார். அதில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.
இதுவே பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரத்தின் களம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்கிறார். அவரது எக்ஸ் தளத்தில் கட்டுப்பாடின்றி தகவல்கள் வெளியாவது தொடர்பான வழக்கு பிரேசில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பதில் அளிக்கும்படி எக்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் தரப்பட்டது.
ஆனால், எலான் மஸ்க் பதிலளிக்க மறுத்து விதண்டாவாதம் செய்தார். தணிக்கை உத்தரவை எதிர்ப்போம் என்று கூறி, பிரேசிலில் செயல்பட்ட எக்ஸ் அலுவலகத்தை மொத்தமாக மூடி ஊழியர்களை நீக்கினார். அலுவலகம் மூடப்பட்டாலும் பிரேசிலில் எக்ஸ் சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவித்து இருந்தார்.
உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்நிலையில் வழக்கை விசாரித்து வரும் பிரேசில் உச்ச நீதிமன்றம், பிரேசில் நாட்டில் எக்ஸ் தளத்திற்கான சட்ட விவகார பிரதிநிதியை அடுத்த 24 மணி நேரத்தில் நியமிக்க வேண்டும். தவறினால் பிரேசில் எக்ஸ் நிறுவனம் முடக்கப்படும் என உத்தரவிட்டு இருந்தது.
பிரேசில் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவையும் ஏற்க எலன் மஸ்க் மறுத்துவிட்டார். இதனையடுத்து, எக்ஸ் தளத்திற்கு தற்காலிக தடை விதித்து பிரேசில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 24 மணிநேரத்திற்குள் எக்ஸ் தளத்தை பிரேசில் நாட்டிலிருந்து முடக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு நீதிபதி அலெக்ஸ்ண்ட்ரே டி மோரேஸ் உத்தரவிட்டார்.
எலன் மஸ்க் பதிலடி
சமூகவலைதளத்தில் எலன் மஸ்க் வெளியிட்டுள்ள பதிவில்,' சுதந்திரமான பேச்சு என்பது ஜனநாயகத்தின் அடித்தளம். பிரேசிலில் ஜனநாயகத்தை அழிக்க முயற்சிக்கின்றனர். பிரேசிலில் ஒரு போலி நீதிபதி அதை அரசியல் நோக்கங்களுக்காக அழித்து வருகிறார்.' என குறிப்பிட்டுள்ளார்.