துபாயில் சட்டென மாறிய வானிலை; மின்னல் தோன்றியதால் தரையிறங்க முடியாமல் திணறிய விமானம்
துபாயில் சட்டென மாறிய வானிலை; மின்னல் தோன்றியதால் தரையிறங்க முடியாமல் திணறிய விமானம்
ADDED : டிச 19, 2025 07:33 PM

துபாய்: துபாயில் பெய்த மழை, மின்னல் காரணமாக எமிரேட்ஸ் விமானம் தரையிறங்க முடியாமல் தடுமாறிய வீடியோ வெளியாகி அனைவரின் பார்வையையும் கவர்ந்துள்ளது.
துபாயில் கடந்த சில நாட்களாக வழக்கத்துக்கு மாறாக நிலவும் சீதோஷ்ண நிலைமை காரணமாக ஆலங்கட்டி மழை பெய்தது. மழையுடன் மின்னல், இடியும் சேர்ந்து கொள்ள அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
வானிலை மோசமாக காணப்பட்ட தருணத்தில் துபாய் விமான நிலையத்தில் தரையிறங்க எமிரேட்ஸ் விமானம் ஒன்று தாழ்வாக பறந்து கொண்டு இருந்தது. அப்போது கடும் மழையுடன் மின்னல் தோன்றி மறைந்தது. மோசமான இந்த வானிலையை சாதுர்யமாக கையாண்ட எமிரேட்ஸ் விமானத்தின் விமானி, விமானத்தை தரையிறங்காமல் மீண்டும் மேலே பறக்கச் செய்து நிலைமையை கையாண்டார். இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியானது.
தொடக்கத்தில் வரவேற்பை பெற்ற இந்த வீடியோ பதிவு, பின்னர் அதிகம் பேரால் கவனிக்கப்பட்டது. அவர்களில் பலர் பாதுகாப்பான முறையில் விமானத்தை கையாண்ட விமானியை வெகுவாக பாராட்டினர்.
அதே நேரத்தில் வானிலை மோசமாக இருப்பதால், எமிரேட்ஸ், பிளைதுபாய் விமானங்கள் தங்கள் சேவைகளை தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. பயணிகள் தங்கள் விமான பயணங்களை புறப்படும் முன் ஒருமுறை உறுதி செய்து கொள்ளுமாறும் விமான நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளன.

