ADDED : ஜன 30, 2025 01:09 AM

கராச்சி: பாகிஸ்தானில், 'டிக் டாக் வீடியோ' வெளியிட்ட 15 வயது மகளை அவரது தந்தையே சுட்டுக்கொன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, 'டிக் டாக்' சமூக ஊடகத்தில் வீடியோ வெளிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த சிறுமியின் குடும்பம் கடந்த 28 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசிக்கிறது.
சிறுமி, 'டிக் டாக்' வீடியோ போடுவது அவரது தந்தைக்கு பிடிக்கவில்லை. அதை நிறுத்தும்படி பலமுறை எச்சரித்துள்ளார். ஆனால் சிறுமி கேட்கவில்லை. இந்நிலையில், பாகிஸ்தானின் குவெட்டாவில் உள்ள சொந்த ஊருக்கு சிறுமியின் குடும்பம் கடந்த 15ல் வந்தது.
அப்போது, வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்தார். எங்கிருந்தோ பாய்ந்து வந்த குண்டுபட்டு சிறுமி இறந்ததாக அவரது தந்தை தெரிவித்தார்.
போலீஸ் நடத்திய விசாரணையில் தந்தையும் அவரது மைத்துனரும் சேர்ந்து சிறுமியை ஆணவக்கொலை செய்தது தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.

