அரபு நாட்டை சேர்ந்தவர் யுனெஸ்கோ இயக்குநராக முதல் முறையாக தேர்வு
அரபு நாட்டை சேர்ந்தவர் யுனெஸ்கோ இயக்குநராக முதல் முறையாக தேர்வு
ADDED : அக் 08, 2025 03:38 AM

பாரிஸ்:யுனெஸ்கோவின் அடுத்த பொது இயக்குநராக, அரபு நாட்டைச் சேர்ந்தவர் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலகளவில் கல்வி, அறிவியல், கலாசாரம் மற்றும் தகவல் தொடர்புகளை மேம்படுத்த 1945ல் ஐக்கிய நாடுகள் சபையால் நிறுவப்பட்டது யுனெஸ்கோ.
யுனெஸ்கோவின் இயக்குநராக இருந்த, ஐரோப்பிய நாடான பிரான்சின் ஆட்ரி அசூலே பதவிக்காலம் முடிவடைந்தது.
இதனால், புதிய இயக்குநரை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து வந்தன. இந்த நிலையில், பாரிசில் நேற்று நடைபெற்ற நிர்வாகக் குழு தேர்வில், 58ல் 55 ஓட்டுகளை பெற்று எகிப்தின் முன்னாள் சுற்றுலா அமைச்சரான காலித் எல் அனனி வெற்றி பெற்றார்.
யுனெஸ்கோ தொடங்கப்பட்டதில் இருந்து முதல் முறையாக, ஒரு அரபு நாட்டவர் இந்த பதவியை வகிக்க உள்ளார். நிர்வாகக் குழுவின் முடிவு நவம்பரில் நடைபெற உள்ள யுனெஸ்கோவின் பொது மாநாட்டில், 194 உறுப்பு நாடுகளின் இறுதி ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும்.
எல் அனானியின் வெற்றி, உலகளவில் அரபு பிரதிநிதித்துவத்திற்கான ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என, எகிப்து அதிபர் அப்துல் பத்தா எல்சிசி பாராட்டினார்.