தேர்தல் நிதி மோசடி வழக்கு; பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோஸி சிறையில் அடைப்பு
தேர்தல் நிதி மோசடி வழக்கு; பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோஸி சிறையில் அடைப்பு
ADDED : அக் 21, 2025 06:14 PM

பாரிஸ்: சட்ட விதிகளுக்கு புறம்பாக, தேர்தல் நிதி திரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோஸி சிறையில் அடைக்கப்பட்டார்.
ஐரோப்பிய நாடான பிரான்ஸின் அதிபராக 2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை இருந்தவர் நிகோலஸ் சர்கோஸி, 70. இவர், 2007ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்கு அப்போதைய லிபியா அதிபர் கடாபியிடமிருந்து நிதி பெற்றதாகவும், அதற்காக வேறு சிலருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.
ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும், அரசியல் நோக்கம் கொண்டவை என்று சர்கோஸி மறுத்தார்.ஆனால், கடாபியிடம் சர்கோஸி தரப்பினர் பணம் பெற்றதை, கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் உறுதி செய்தார்.
இது தொடர்பான வழக்கு பாரிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.விசாரித்த நீதிபதி, முன்னாள் அதிபர் சர்கோஸி மீதான சதித்திட்ட குற்றச்சாட்டு நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என்று கூறி, அவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்நிலையில், இன்று (அக்டோபர் 21) பாரிசில் உள்ள லா சாண்டி சிறையில் நிகோலஸ் சர்கோஸி அடைக்கப் பட்டார். அவர் பாதுகாப்பு காரணங்களுக்காக தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஒருவர், இத்தகைய குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
இதற்கிடையே, தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து நிகோலஸ் சர்கோஸி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.