UPDATED : அக் 13, 2025 03:31 PM
ADDED : அக் 13, 2025 12:20 PM

ஜெருசலேம்: காசா போர் நிறுத்தம் எதிரொலியாக, பிணைக்கைதிகள் விடுவிக்கும் பணியை ஹமாஸ் படையினர் விடுவித்தனர். அவர்கள், செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இரண்டு கட்டங்களாக அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, 2023 அக்டோபரில் இருந்து கடுமையான போர் நடந்து வருகிறது. இதில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
லட்சக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான நடவடிக்கைகளில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். 'அமைதி ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்க வேண்டும்; பிணை கைதிகளை விடுவிக்க வேண்டும்' என, டிரம்ப் கெடு விதித்திருந்தார்.
இதையடுத்து, எகிப்தின் ஷர்ம் அல் - ஷேக் நகரில், எகிப்து, கத்தார், துருக்கி மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தம் வாயிலாக மூன்று நாட்களாக பேச்சு நடந்தது. அதில் சுமுக முடிவு எடுக்கப்பட்டதை அடுத்து, இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த 10ம் தேதி முதல் தற்காலிக போர் நிறுத்தம் அமலானது.
காசாவில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இறுதி கட்ட ஒப்பந்தம், எகிப்தில் இன்று கையெழுத்தாகவுள்ளது. தற்போது காசா போர் நிறுத்தம் எதிரொலியாக, பிணைக்கைதிகள் விடுவிக்கும் பணியை ஹமாஸ் படையினர் தொடங்கி விட்டனர். முதல்கட்டமாக 7 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
முதலில் விடுவிக்கப்பட்ட பிணைக்கைதிகள் பெயர் விபரம் பின்வருமாறு:
* காலி பெர்மன்
* ஜிவ் பெர்மன்
* ஈட்டன் ஆபிரகாம்
* ஓம்ரி மீரான்
* மதன் ஆங்ரெஸ்ட்
* ஆலன் ஓஹெல்
* கில்போவா டலாஸ்
இவர்கள் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களின் உடல்நிலை குறித்த தகவல் வெளியாகவில்லை. அவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விரைவில் குடும்பத்தினரை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்ட பிணைக்கைதிகள் 13 பேர் விபரம் பின்வருமாறு:
* ஆபிரகாம் குபெர்ஷ்டீன்,
*எய்தார் டேவிட்,
* யோசெப்-சாய்ம் ஓஹானா,
* செகேவ் கல்போன்,
* அவினாடன்
* எல்கானா போஹ்போட்,
* மாக்சிம் ஹெர்கின்,
* நிம்ரோட் கோஹன்,
* மதன் ஜங்காக்கர்,
* ஈடன் ஹார்ன்,
* ஆபிரகாம்
* ரோம் பிராஸ்லாவ்ஸ்கி,
* ஏரியல் குனியோ
* டேவிட் குனியோ
இவர்கள் காசாவின் தெற்கு பகுதியில் உள்ள கான் யூனிஸ் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவது காசா போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தின் மிகப்பெரிய வெற்றியாக உலக நாடுகள் மத்தியில் பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் சிறையில் இருக்கும் பாலஸ்தீனிய கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.