காசா அமைதி வாரியம் அமைப்பு; டிரம்பின் முடிவுக்கு இஸ்ரேல் பிரதமர் கடும் எதிர்ப்பு
காசா அமைதி வாரியம் அமைப்பு; டிரம்பின் முடிவுக்கு இஸ்ரேல் பிரதமர் கடும் எதிர்ப்பு
UPDATED : ஜன 19, 2026 09:52 AM
ADDED : ஜன 18, 2026 07:34 AM

ஜெருசலேம்: காசாவிற்கான அமைதி வாரியத்தை டிரம்ப் அமைத்ததற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்த 2023ல் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டுவது என்ற இலக்குடன் இஸ்ரேல், காசா மீது தீவிர தாக்குதல் நடத்தியது.
இரண்டு ஆண்டுகளாக நீடித்த போர் கடந்த ஆண்டு அக்டோபரில், அமெரிக்க அதிபர் டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டத்தின் கீழ் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. அமைதி திட்டத்தின் கீழ் ஹமாஸ் பயங்கரவாதிகள் ஆயுதங்களை ஒப்படைப்பது, இஸ்ரேல் படைகள் பின்வாங்குதல், காசாவில் புதிய அரசு, மறுகட்டமைப்பு ஆகியவற்றை செயல்படுத்த உள்ளனர்.
தற்போது மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க ஆதரவு திட்டத்தின் ஒரு பகுதியாக, காசா அமைதி வாரியத்தை அமைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். அவர், இது பிராந்தியத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்க ஆதரவு திட்டத்தின் இரண்டாவது கட்ட நடவடிக்கை என்று தெரிவித்தார். இதற்கு இஸ்ரேல் பிரதமர் கடும் எதிர்ப்பையும், ஆட்சேபனையையும் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: டிரம்பின் கீழ் காசா அமைதித் திட்ட முயற்சிகளை மேற்பார்வையிட புதிதாக அமைதி வாரியம் குறித்த அறிவிப்பு, இஸ்ரேலுடன் ஒருங்கிணைக்கப் படவில்லை. எங்களது கொள்கைக்கு முரணானது. இவ்வாறு பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்து உள்ளார்.
குழுவில் யார் இருக்கிறார்கள்?
இந்தக் குழுவில் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, அதிபர் டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் ஆகியோர் அடங்குவர். டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர், டிரம்ப் ஆலோசகர் ராபர்ட் கேப்ரியல் ஆகியோரும் அடங்குவர்.

