180 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்; நால்வரை கொன்ற மாணவரின் தந்தைக்கு... அறிவித்தார் நீதிபதி!
180 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்; நால்வரை கொன்ற மாணவரின் தந்தைக்கு... அறிவித்தார் நீதிபதி!
UPDATED : செப் 07, 2024 10:18 AM
ADDED : செப் 07, 2024 09:59 AM

வாஷிங்டன்: 'ஜார்ஜியாவில் துப்பாக்கிச் சூடு நடத்தி நால்வரை கொன்ற, 14 வயது மாணவனின் தந்தை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 180 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்' என நீதிபதி கியூரி மிங்கிள் தெரிவித்தார்.
அமெரிக்காவின் ஜார்ஜியாவின் பாரோ கவுண்டி மாகாணத்தில் அப்பலாஜி என்ற இடத்தில் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.
விசாரணையில், 4 பேரின் உயிரை பறித்தவர், 14 வயது மாணவர் என்றும், கொல்லப்பட்ட நான்கு பேரில் இருவர் சக மாணவர்கள், இருவர் ஆசிரியர்கள் என தெரிந்தது. மாணவனின் தந்தையான 54 வயதுடைய கொலின் கிரே மீது படுகொலை, இரண்டாம் நிலை கொலை ஆகிய குற்றச்சாட்டின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் மகனுடன், தந்தை ஆஜர் ஆனார்.
180 ஆண்டுகள்
அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தனது 14 வயது மகனுக்கு துப்பாக்கியைக் கொடுத்த குற்றத்திற்காக, அதிகபட்சமாக 180 ஆண்டுகள் சிறைத்தண்டனை எதிர்கொள்ள நேரிடும். இரண்டாம் நிலைக் கொலைக் குற்றத்திற்காக 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.
அதிகபட்ச தண்டனை என்பதால் ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க நேரிடும் என்றும் நீதிபதி கியூரி அதிரடி அறிவித்தார்.
இந்தாண்டில் இதுவரை 46 சம்பவம்
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் சர்வ சாதாரணம். அதுவும் பள்ளி செல்லும் மாணவர்கள், துப்பாக்கியை கொண்டு செல்வதும் அடிக்கடி நடக்கிறது. இந்தாண்டில் மட்டும் இதுவரை, 46 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அமெரிக்க பள்ளிகளில் நடந்துள்ளன. ஜார்ஜியாவில் நடந்தது, 45வது சம்பவம். அதற்கு பிறகும் கூட, இன்னொரு பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்து விட்டது.இதற்கு தீர்வு தெரியாமல், அமெரிக்க போலீசாரும், அரசியல் கட்சியினரும் திணறி வருகின்றனர்.