'க்ராக்' ஏ.ஐ.,யில் ஆபாச உள்ளடக்கம் 'எக்ஸ்' நிறுவனத்துக்கு அரசு எச்சரிக்கை
'க்ராக்' ஏ.ஐ.,யில் ஆபாச உள்ளடக்கம் 'எக்ஸ்' நிறுவனத்துக்கு அரசு எச்சரிக்கை
ADDED : ஜன 03, 2026 03:11 AM
புதுடில்லி: 'எக்ஸ்' சமூக வலைதள நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான, 'க்ராக்' வசதியை தவறாக பயன்படுத்தி பெண்களை ஆபாசமாக சித்தரித்து இழிவுபடுத்துவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, 'கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, 'எக்ஸ்' நிறுவனத்தை மத்திய அரசு எச்சரித்து உள்ளது.
'க்ராக்' செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நாம் கேட்கும் கேள்விக்கு தகவல்கள் வழங்குவது மட்டுமின்றி, கேட்கும் படங்களையும் உருவாக்கி வழங்கும். தமிழ் உட்பட பல மொழிகளில் பதில் அளிக்கும்.
நோட்டீஸ் இது குறைவான கட்டுப்பாடுகள் உடைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், போலி கணக்குகள் மூலம் பலர் இந்த வசதியை தவறாக பயன்படுத்தி பெண்களின் புகைப்படங்களை பதிவேற்றி ஆடைகளை குறைத்து பாலியல் ரீதியாக இழிவுபடுத்தும் செயற்கை படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர்.
இது தொடர்பாக மத்திய அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து டிஜிட்டல் தளங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், 'எக்ஸ்' நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பிஉள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
'க்ராக்' செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மீறியுள்ளது. க்ராக்கின் தொழில்நுட்பம், செயல்முறை போன்ற கட்டமைப்பை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.
ஆபாசம், நிர்வாணம், அநாகரிகம், பாலியல் உள்ளடக்கங்கள் உருவாக்கப்படாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்த வேண்டும்.
நடவடிக்கை அனைத்து சட்டவிரோத உள்ளடக்கங்களையும் உடனடியாக நீக்க வேண்டும். அதை வெளியிடும் பயனர்களை, 'எக்ஸ்' தடை செய்ய வேண்டும். நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை 72 மணி நேரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
விதிகளை மீறினால் பல்வேறு பிரிவுகளின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

