அதிகாரத்தில் நீடிக்க வர்த்தகப் போரை பயன்படுத்த முயற்சி: கனடா பிரதமர் மீது டிரம்ப் குற்றச்சாட்டு
அதிகாரத்தில் நீடிக்க வர்த்தகப் போரை பயன்படுத்த முயற்சி: கனடா பிரதமர் மீது டிரம்ப் குற்றச்சாட்டு
UPDATED : மார் 06, 2025 08:47 AM
ADDED : மார் 06, 2025 07:38 AM

வாஷிங்டன்: கனடா கவர்னர் ட்ரூடோ அதிகாரத்தில் நீடிக்க வர்த்தகப் போரை பயன்படுத்த முயற்சிக்கிறார் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டொனால்டு டிரம்ப் கூறியதாவது: கனடாவைச் சேர்ந்த ஜஸ்டின் ட்ரூடோ, இறக்குமதி வரி உயர்வு பற்றி என்ன செய்யலாம் என்று கேட்க என்னை தொலைபேசியில் அழைத்தார். கனடா மற்றும் மெக்சிகோ எல்லைகள் வழியாக வந்த போதைப்பொருள் காரணமாக பலர் இறந்துள்ளனர் என்று நான் அவரிடம் சொன்னேன்.
அது சரியாகிவிட்டது என்று அவர் கூறினார், ஆனால் நான், அது போதாது என்றேன். கனடா பிரதமர் தேர்தல் எப்போது நடக்கிறது என்று அவரால் என்னிடம் சொல்ல முடியவில்லை, இது எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது, அங்கே என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை.
ட்ரூடோ அதிகாரத்தில் நீடிக்க வர்த்தகப் போரை பயன்படுத்த முயற்சிக்கிறார் என்பதை நான் உணர்ந்தேன். ட்ரூடோவுக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். தன் அண்டை நாடுகளான கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீத வரியை விதிக்கும் உத்தரவை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிறப்பித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க பொருட்களுக்கு கனடாவும் வரி விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது. கனடா பிரதமரை, தன் அறிக்கைகளில் கனடா கவர்னர் என்று டிரம்ப் கிண்டல் செய்து குறிப்பிடுவது தொடர்ந்து நடக்கிறது.