கிரீன்லாந்து மக்களுக்கு சொந்தமானது: ஐரோப்பிய தலைவர்கள் கூட்டறிக்கை
கிரீன்லாந்து மக்களுக்கு சொந்தமானது: ஐரோப்பிய தலைவர்கள் கூட்டறிக்கை
ADDED : ஜன 06, 2026 10:24 PM

லண்டன்: கிரீன்லாந்துக்கு அதிபர் டிரம்ப் உரிமை கோரும் நிலையில், அந்தப் பகுதி அங்கு வாழும் மக்களுக்கு சொந்தமானது என ஐரோப்பிய தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கைது
போதைமருந்து கடத்துவதாகக் கூறி வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும், அவரது மனைவியையும் அமெரிக்கப் படைகள் பிடித்துச் சென்றன. இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் டிரம்ப் அதனை கண்டுகொள்ளவில்லை. அந்நாட்டு இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார். இருப்பினும், வெனிசுலாவை அமெரிக்கா நிர்வகிக்கும் என டிரம்ப் கூறி வருகிறார்.
பதிலடி
இதற்கு அடுத்து டிரம்ப் கொலம்பியா அதிபர் பெட்ரோவுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தார். இதனையடுத்து கொலம்பியா மீது டிரம்ப் குறிவைப்பாரா என கேள்வி எழுந்தது. டிரம்ப்பின் எச்சரிக்கை பற்றி கவலைப்படப்போவதில்லை என பெட்ரோ கூறியுள்ளார்.
கேள்வி
இதனிடையே, டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமாக டென்மார்க் விளங்குகிறது. இங்கு அரியவகை தாது பொருட்கள் கொட்டிக்கிடக்கின்றன. இந்த பகுதியை 2020ம் ஆண்டு முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரிமை கோரி வருகிறார். ஆனால், இதற்கு டென்மார்க் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தற்போது வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை எடுத்துள்ளதால், கிரீன்லாந்து மீதும் டிரம்ப் நடவடிக்கை எடுப்பார் என்ற அச்சம் டென்மார்க்கில் எழுந்துள்ளது.
இந்நிலையில் கிரீன்லாந்து பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ஜெர்மனி அதிபர் மெர்ஸ், இத்தாலி பிரதமர் மெலோனி, போலந்து பிரதமர் டஸ்க் , ஸ்பெயினின் பிரதமர் சான்செஸ், பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் மற்றும் டென்மார்க் பிரதமர் பிரடெரிக்சன் ஆகியோர் கூட்டு அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஐரோப்பாவிற்கு ஆர்க்டிக் பாதுகாப்பு ஒரு முக்கிய முன்னுரிமையாக உள்ளது. இது சர்வதேச மற்றும் அட்லாண்டிக் கடல்கடந்த பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியம். ஆர்க்டிக் பகுதி, தங்களுக்கு முன்னுரிமை என்பதை நேட்டோ அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது. ஆர்க்டிக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், எதிரிகளைத் தடுக்கவும் நாமும், பல நட்பு நாடுகளும் செயல்பாடுகள் மற்றும் முதலீடுகளை அதிகரித்துள்ளோம். கிரீன்லாந்து உள்ளிட்ட டென்மார்க் பிராந்தியம் நேட்டோவின் ஒரு பகுதியாகும்.
கூட்டாளி
ஆர்க்டிக் பாதுகாப்பை, பொறுத்தவரை, அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நட்பு நாடுகளுடன் இணைந்து, இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் எல்லைகளை மீற முடியாத தன்மை உள்ளிட்ட ஐ.நா. சாசனத்தின் கொள்கைகளை நிலைநிறுத்துவதன் மூலம் கூட்டாக அடைய வேண்டும். இந்த முயற்சியில், நேட்டோவின் நட்பு நாடாகவும், 1951 ஆம் ஆண்டு டென்மார்க்கிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் மூலமாகவும் அமெரிக்கா ஒரு அத்தியாவசிய கூட்டாளியாக உள்ளது.
கிரீன்லாந்து அதன் மக்களுக்கு சொந்தமானது. டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தொடர்பான விஷயங்களில் முடிவு செய்வது டென்மார்க் மற்றும் கிரீன்லாந்தின் உரிமை, அவர்கள் மட்டுமே. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

