பிணைக்கைதிகளை சித்ரவதை செய்யும் ஹமாஸ்; சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை எதிர்பார்க்கும் இஸ்ரேல்
பிணைக்கைதிகளை சித்ரவதை செய்யும் ஹமாஸ்; சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை எதிர்பார்க்கும் இஸ்ரேல்
UPDATED : ஆக 04, 2025 10:01 AM
ADDED : ஆக 04, 2025 09:53 AM

ஜெருசலம்: காசாவில் சிறைபிடிக்கப்பட்ட தங்கள் நாட்டு பிணைக்கைதிகளுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (International Committee of the Red Cross) முன்வர வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.
கடந்த இரண்டரைக்கு ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நீடித்து வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் பயங்கரவாதிகள், 1200 பேரை சுட்டுக் கொன்றதுடன், 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றுள்ளனர்.
பிணைக்கைதிகளில் பலர் இறந்து விட்ட நிலையில், சிலர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 49 பேர் ஹமாஸ் பிடியில் சிக்கியுள்ளனர். பிணைக்கைதிகளை விடுவிக்கக் கோரி ஹமாஸ் அமைப்பின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே, இஸ்ரேலை அடிபணிய வைக்கும் விதமாக, தங்களது பிடியில் உள்ள இஸ்ரேல் பிணைக்கைதி ஒருவரின் வீடியோவை ஹமாஸ் வெளியிட்டுள்ளது. எலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் அந்த நபர், மண்வெட்டியுடன் தனக்கு தானே புதைக்குழியை வெட்டிக் கொள்ளும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த நிலையில், ஹமாஸ் பிடியில் இருக்கும் பிணைக்கைதிகளுக்கு உதவ சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தலையிட வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.
காசாவின் பிராந்திய ஜூலியன் லெரிசனிடம் பேசிய அவர், 'காசாவில் உள்ள தங்கள் நாட்டு பிணைக்கைதிகளுக்கு தேவையான உணவு, மருத்துவ சேவை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, சிறைபிடிக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகளை சந்திக்க ஹமாஸ் அனுமதிக்க வேண்டும் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.