பதில் சொல்லாமல் இருந்தால் எப்படி; எலான் மஸ்க்கிடம் கேட்கிறார் பெண் எழுத்தாளர்!
பதில் சொல்லாமல் இருந்தால் எப்படி; எலான் மஸ்க்கிடம் கேட்கிறார் பெண் எழுத்தாளர்!
ADDED : பிப் 16, 2025 05:45 PM

நியூயார்க்: 'தன் குழந்தைக்கு எலான் மஸ்க் தான் தந்தை' என்று கூறிய எழுத்தாளர் ஆஷ்லே கிளேர், 'எங்களுக்கு எப்போது பதில் அளிப்பீர்கள்' என்று மஸ்க்கிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
உலகின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் சமூக வலைதளம் எக்ஸ் ஆகியவற்றை நடத்தி வருகிறார். இவருக்கு மூன்று முறை திருமணம் ஆகி, 12 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், எழுத்தாளரும், பழமைவாத சிந்தனை கொண்டவருமான 31 வயதான ஆஷ்லே கிளேர், தனக்கு பிறந்துள்ள 5 மாதக் குழந்தைக்கு
எலான் மஸ்க் தான் தந்தை என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், அதை மஸ்க் ஆமோதிக்கவும் இல்லை; மறுக்கவும் இல்லை.
ஆனால், சர்ச்சைக்குரிய பதிவர் ஒருவர் இட்ட பதிவில் மஸ்க் பதில் அளித்தார். 'ஆஷ்லே கிளேர் கடந்த ஐந்தாண்டுகளாக எலான் மஸ்க் மூலம் குழந்தை பெறுவதற்காக சதி செய்தார்' என்று அந்த பதிவர் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டார்.
அதற்கு பதில் அளிக்கும் வகையில் மஸ்க், 'whoa' என்று பதிவிட்டார். இதற்கு, ஆச்சர்யம் அல்லது வியப்பு அடைவதாக பொருள் கொள்ள முடியும்.
மஸ்க்கின் பதிலால் ஆத்திரம் அடைந்த ஆஷ்லே கிளேர், ''எலான், கடந்த பல நாட்களாக நாங்கள் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம், ஆனால் நீங்கள் பதிலளிக்கவில்லை. 15 வயதில் நான் உள்ளாடையில் இருந்தபோது எடுத்த தனிப்பட்ட படங்களை வெளியிட்ட நபர் செய்யும் அவதுாறுக்கு பதில் அளிப்பதற்கு பதிலாக, எப்போது எங்களுக்குப் பதிலளிப்பீர்கள்' என்று கேட்டு பதிவிட்டார். சிறிது நேரத்தில் அதையும் நீக்கி விட்டார்.
எனினும், அவரது பதிவின் ஸ்கிரீன் ஷாட் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.இந்நிலையில் ஆஷ்லே கிளேரின் பிரதிநிதி ஒருவர் வெளியிட்ட அறிக்கை:
எலான் மஸ்க்கும், ஆஷ்லேவும், தங்கள் குழந்தையை வளர்ப்பது தொடர்பான ஒப்பந்தம் ஒன்றை தனிப்பட்ட முறையில் தயார் செய்து வருகின்றனர். ஆனால் அதை ரகசியமாக செய்ய முடியாத நிலையை பத்திரிகையாளர் ஒருவர் ஏற்படுத்தி விட்டார். தனது தந்தைக்குரிய பாத்திரத்தை, எலான் மஸ்க் பொதுவெளியில் ஒப்புக்கொள்வதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.