இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன் நான்: மகிழ்ச்சியுடன் சொல்கிறார் நியூசிலாந்து பிரதமர்!
இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன் நான்: மகிழ்ச்சியுடன் சொல்கிறார் நியூசிலாந்து பிரதமர்!
ADDED : அக் 10, 2024 09:00 PM

வியன்டியன்: 'நான் இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன்,' என நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சான் கூறினார்.
ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, 2 நாள் பயணமாக, பிரதமர் மோடி, இன்று லாவோஸ் நாட்டிற்கு சென்றார்.
வியான்டியனில் பல்வேறு நாட்டு தலைவர்களை, மோடி சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸானை சந்தித்து பேசினார்.
பிரதமர் மோடியை சந்தித்த பின் நியூசிலாந்து பிரதமர் லக்ஸான் கூறியதாவது:
இந்தியா-நியூசிலாந்து இரு தரப்பு நாடுகளின் பாதுகாப்பு, ஆழமான நட்புறவு, பலமான உறவு குறித்து பேசினோம். பிரதமர் மோடியுடனான சந்திப்பு அற்புதமாக இருந்தது.
நான் இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன்.நான் நேசிக்கும், பெரிதும் போற்றும் நாடு. நியூசிலாந்தில் உள்ள இந்தியர்கள் சிறப்பாக உள்ளனர்.அங்கு, அவர்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள்.
இது ஒரு அற்புதமான சந்திப்பு, எங்களை மிகவும் அன்புடன் அழைத்து பேசினார். பல்வேறு துறைகளில் நாங்கள் இந்திய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறோம். தொடர்ந்து பணியாற்றுவோம்.
இவ்வாறு நியூசிலாந்து பிரதமர் கூறினார்.
பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸான் உடன் சந்திப்பானது சிறப்பாக இருந்தது. ஜனநாயகம், சுதந்திரம், சட்டம் குறித்து பேசினோம். இரு நாட்டு நட்புறவு மதிப்பு மிகுந்தது. பொருளாதார கூட்டுறவு, சுற்றுலா, கல்வி மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகள் குறித்து ஆலோசனை நடத்தினோம். இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.