இந்தியா அணை கட்டினால்... பாக்., ராணுவ தளபதி கொக்கரிப்பு
இந்தியா அணை கட்டினால்... பாக்., ராணுவ தளபதி கொக்கரிப்பு
ADDED : ஆக 11, 2025 07:34 AM

வாஷிங்டன்: சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டினால், அதனை 10 ஏவுகணைகளால் தாக்கி அழிப்போம் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி முனீர் கொக்கரித்துள்ளார்.
பகல்ஹாம் தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு, பாகிஸ்தானுக்கு இந்தியா பல்வேறு வழிகளில் பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில், பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
இந்த நிலையில், அமெரிக்காவுக்கு கடந்த இரு மாதத்தில் 2வது முறையாக சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர், டம்பாவில் சென்ட்காம் தளபதி ஜெனரல் மைக்கேல் குரில்லாவின் ஓய்வு விழா மற்றும் புதிய தளபதி அட்மிரல் பிராட் கூப்பரின் பொறுப்பேற்பு விழாவில் கலந்துகொண்டார்.
அப்போது, பேசிய அவர், 'இந்தியாவிடமிருந்து அச்சுறுத்தல் ஏற்பட்டால், உலகின் பாதியை அழித்துவிடுவோம்' என்று எச்சரித்துள்ளார். இது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சிந்து நதிநீர் விவகாரத்தில் இந்தியாவுக்கும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார். ' சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டுவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். அணை கட்டினால், 10 ஏவுகணைகளால் அதை அழிப்போம். சிந்து நதி இந்தியர்களின் குடும்ப சொத்து அல்ல. எங்களிடம் ஆயுதப் பற்றாக்குறை ஏதுமில்லை,' என்று கூறியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது பாகிஸ்தான் ராணுவம் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை இந்தியா மீது ஏவியது. அவற்றில் ஒரு ஏவுகணை கூட இந்திய நிலைகளை தாக்கவில்லை. இந்தியாவுக்குள் வரும் முன்னரே அவற்றை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அத்தகைய சூழ்நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதி இப்படி கூறியிருப்பது சர்வதேச ராணுவ வட்டாரங்களில் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே வரிவிதிப்பால் இந்தியா - அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் சூழலில் அமெரிக்க மண்ணில் இருந்தவாறு இந்தியாவுக்கு பாகிஸ்தான் தளபதி மிரட்டல் விடுத்திருப்பது பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.