ADDED : ஜன 15, 2025 08:10 AM

சியோல்: ராணுவ ஆட்சியை அமல் செய்த விவகாரத்தில், பதவி நீக்கப்பட்ட தென்கொரியா அதிபர் யூன் சுக் இயோலை அதிகாரிகள் கைது செய்தனர்.
கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில், அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் மசோதா தொடர்பாக ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, அந்நாட்டின் அதிபராக இருந்த யூன் சுக் இயோல், 63, அவசரநிலை ராணுவ சட்டத்தை சமீபத்தில் அமல்படுத்தினார். இதற்கு எதிர்க்கட்சிகளும், ஆளுங் கட்சியில் சில எம்.பி.,க்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், சில மணி நேரங்களில் அவசரநிலை அறிவிப்பை யூன் சுக் இயோல் திரும்பப் பெற்றார். இதற்கிடையே, ராணுவ சட்டத்தை பிரகடனம் செய்த யூன் சுக் இயோலை பதவிநீக்க வலியுறுத்தி, அந்நாட்டு பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் வெற்றி பெற்றது; இதையடுத்து, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். யூன் சுக் இயோலுக்கு தென் கொரிய நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்து இருந்தது.
ஜன.,03ம் தேதி தென் கொரியா புலன் ஆய்வு அதிகாரிகள், பதவி நீக்கப்பட்ட தென்கொரியா அதிபர் யூன் சுக் இயோல் வீட்டிற்கு சென்றனர். யூன் சுக் இயோலை அதிகாரிகள் கைது செய்தபோது அவரது ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். கடைசியில் கைது செய்யாமல் அதிகாரிகள் கிளம்பிவிட்டனர்.
இந்நிலையில் இன்று(ஜன., 15) சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் யூன் சுக் இயோல் வீட்டிற்கு வந்தனர். இதனை அறிந்த அவரது ஆதரவாளர்கள் வீட்டிற்கு முன் சூழ்ந்தனர். இரு தரப்பினருக்கும் கடுமையான வாக்குவாதம் மோதல் ஏற்பட்டது. கைது முயற்சியை தடுத்து நிறுத்த முயற்சித்தனர். இதை அடுத்து நீண்ட நேரத்திற்கு பிறகு, அவர் கைது செய்யப்பட்டார். இன்னும் 48 மணி நேரம் அதிகாரிகள் கண்காணிப்பில், யூன் சுக் இயோல் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ' சட்டத்தின் முன் ஆட்சி முற்றிலும் சரிந்து விட்டது' என கைது செய்யப்படுவதற்கு முன், யூன் சுக் இயோல் பதிவிட்ட வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.