இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள்: ஓமனில் பிரதமர் மோடி பெருமிதம்
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள்: ஓமனில் பிரதமர் மோடி பெருமிதம்
ADDED : டிச 18, 2025 05:09 PM

மஸ்கட்: '' கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், பொருளாதாரத்தின் டிஎன்ஏவை மாற்றியுள்ளன,'' என பிரதமர் மோடி கூறினார்.
ஓமன் சென்றுள்ள பிரதமர் மோடி, மஸ்கட் நகரில் இந்தியா ஓமன் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பேசியதாவது:
கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா கொள்கைகளை மட்டும் மாற்றம் செய்யவில்லை. பொருளாதார டிஎன்ஏவையும் மாற்றம் செய்துள்ளது. ஜிஎஸ்டி, இந்தியா முழுவதையும் ஒரே நாடாக ஒருங்கிணைத்து, ஒரே சந்தையாக மாற்றியுள்ளது. முதலீட்டாளர்களின் நம்பிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கொண்டாட்டம்
இதன் பிறகு இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார். மோடி உரையை துவக்கும் முன்னர், அங்கிருந்தவர்கள் 'பாரத் மாதா கி ஜெய்', ' வந்தே மாதரம்,' ' மோடி, மோடி' என கோஷம் போட்டனர்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது: இந்திய புலம்பெயர் சமூகம் சக வாழ்வுக்கும் ஒத்துழைப்புக்கும் ஒரு வாழும் உதாரணமாகத் திகழ்கிறது. இன்று நாம் அனைவரும் ஒரே குடும்பமாக ஒன்று சேர்ந்துள்ளோம். ஒரே நாடு, ஒரே அணி இந்தியா ஆக நாம் கொண்டாடுகிறோம்.
இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை என்பது நமது கலாசாரத்தின் வலிமையான தளமாக உள்ளது. நம்மை பொறுத்த வரை ஒவ்வொரு நாளும் புதிய வண்ணங்களை கொண்டு வருகிறது. ஒவ்வொரு பருவமும் ஒரு புதிய திருவிழாவாக மாறுகிறது. ஒவ்வொரு பாரம்பரியமும் ஓரு புதிய சிந்தனையுடன் வருகிறது. இதனால்தான், நாங்கள் இந்தியர்கள் எங்கு சென்றாலும், எங்கு வசித்தாலும் பன்முகத்தன்மையை மதிக்கிறோம்.
சமீபத்தில் தீபாவளி பண்டிகையை யுனெஸ்கோ அமைப்பு கலாசார பாரம்பரிய பட்டியலில் சேர்த்துள்ளது. தற்போது தீபாவளி தீபம் நமது வீட்டை மட்டுமல்ல முழு உலகத்தையும் ஒளிரச் செய்யும். இது உலகெங்கிலும் உள்ள இந்தியர்களுக்குப் பெருமைக்குரிய விஷயம்.
தீபாவளிக்குக் கிடைத்துள்ள இந்த உலகளாவிய அங்கீகாரம், நம்பிக்கையையும், நல்லிணக்கத்தையும், மனிதநேயச் செய்தியையும் பரப்பும் நமது ஒளிக்குக் கிடைத்த அங்கீகாரமாகும். இந்தியாவுக்கும் ஓமனுக்கும் இடையே எப்போதும் நெருக்கமான மற்றும் உயிரோட்டமான உறவுகள் இருந்து வருகின்றன. இந்தியப் பெருங்கடலின் பருவக் காற்றுகள் இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்திற்கு வழிகாட்டியுள்ளன.
நமது முன்னோர்கள், லோதல், மாண்டவி, தாம்ரலிப்டி போன்ற துறைமுகங்களில் இருந்து மரப்படகு மூலம் ஓமனின் மஸ்கட், சுர் மற்றும் சாலாஹ் நகரங்களுக்கு வந்தனர். மாண்டவி முதல் மஸ்கட் வரையிலான இந்த வரலாற்று உறவுகள் நமது தூதரகத்தால் ஒரு புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

