இந்தியா - நேபாளம் இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்து
இந்தியா - நேபாளம் இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்து
ADDED : ஏப் 03, 2025 06:22 AM

காத்மாண்டு: நேபாளத்தில், சமூக மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்ள, அந்நாட்டுடன், 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், நம் நாடு கையெழுத்திட்டுள்ளது.
நம் அண்டை நாடான நேபாளத்தில், 2003 முதல், உயர் தாக்க சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சொந்த நிதியில், நம் நாடு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், இந்தியா - நேபாளம் இடையே, 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சமீபத்தில் கையெழுத்தாகின.
இது குறித்து, காத்மாண்டுவில் உள்ள நம் துாதரகம் வெளியிட்ட அறிக்கை:
நேபாளத்தில் கல்வி, சுகாதாரம், கலாசாரத் துறைகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள, அந்நாட்டுடன், 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் நம் நாடு கையெழுத்திட்டுள்ளது.
இதன் மொத்த மதிப்பு, 390 கோடி ரூபாய். இத்திட்டங்களை செயல்படுத்துவது, நேபாள மக்களுக்கு சிறந்த கல்வி, சுகாதாரம் மற்றும் கலாசார வசதிகளை வழங்க உதவும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தங்களின்படி, நேபாளத்தில் மூன்று பள்ளிகள், ஒரு மடாலயம், ஒரு பள்ளியில் மின் நுாலகம் மற்றும் இரண்டு சுகாதார நிலையக் கட்டடங்கள் ஆகியவை கட்டப்பட உள்ளன.