ஹாட்ரிக் வெற்றியுடன் சூப்பர்-8 சுற்றில் இந்தியா! சுழலில் சுருண்டது பாகிஸ்தான்
ஹாட்ரிக் வெற்றியுடன் சூப்பர்-8 சுற்றில் இந்தியா! சுழலில் சுருண்டது பாகிஸ்தான்
UPDATED : பிப் 15, 2026 11:59 PM
ADDED : பிப் 15, 2026 10:31 PM

கொழும்பு: 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் அசத்திய இந்திய அணி, பாகிஸ்தானை 61 ரன் வித்தியாசத்தில் சுலபமாக வீழ்த்தியது. 27 பந்தில் அரைசதம் விளாசிய இஷான் கிஷான், வெற்றிக்கு கைகொடுத்தார். தொடர்ந்து 3 வெற்றி பெற்ற இந்திய அணி, 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறியது.
இந்தியா, இலங்கையில் 10வது 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. கொழும்பு, பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.
குல்தீப் வாய்ப்பு
இந்திய அணியில் சாம்சன், அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக அபிஷேக் சர்மா, குல்தீப் யாதவ் இடம் பெற்றனர். பாகிஸ்தான் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா, 'பவுலிங்' தேர்வு செய்தார். இரு அணி கேப்டன்களும் கைகுலுக்கி கொள்ளவில்லை.
அபிஷேக் அதிர்ச்சி
இந்திய அணிக்கு துவக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. 'ஸ்பின்னர்' சல்மான் அகா வீசிய முதல் ஓவரில் அபிஷேக் சர்மா 'டக்' அவுட்டானார். 'வேகப்புயல்' ஷாகீன் ஷா அப்ரிதி வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தை இஷான் கிஷான் சிக்சருக்கு அனுப்பினார்.
2வது பந்தில் பவுண்டரி அடித்தார். திலக் வர்மாவும் ஒரு பவுண்டரி அடிக்க, மொத்தம் 15 ரன் கிடைத்தன. இதற்கு பின் பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சை சிதறடித்தார் இஷான். அப்ரார் அகமது ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். 'பவர் பிளே' (முதல் 6 ஓவர்) முடிவில் இந்தியா 52/1 ரன் எடுத்தது. அப்ரார் அகமது ஓவரில் (7வது) 'ஹாட்ரிக்' பவுண்டரி விளாசிய இஷான், 27 பந்தில் அரைசதம் அடித்தார்.
தொடர்ந்து ஷதாப் கான் ஓவரிலும் ஒரு சிக்சர், பவுண்டரி அடிக்க, இந்திய ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். சைம் அயூப் 'சுழலில்' இஷான் (77 ரன், 10x4, 3x6) போல்டானார். பின் திலக் வர்மா, சூர்யகுமார் விவேகமாக விளையாட, 14 ஓவரில் 125/2 என வலுவாக இருந்தது.
ஒரே ஓவரில் 2 விக்., போட்டியின் 15வது ஓவரை வீசிய சைம் அயூப் இரட்டை அதிர்ச்சி கொடுத்தார். 2வது பந்தில் திலக் வர்மா (25) எல்.பி.டபிள்யு., ஆனார்.
3வது பந்தை துாக்கி அடித்த ஹர்திக் பாண்ட்யா (0) நடையை கட்டினார். 4வது பந்தில் ஷிவம் துபே கண்டம் தப்ப, அயூப் 'ஹாட்ரிக்' கனவு தகர்ந்தது. இந்தியா 15 ஓவரில் 127/4 என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. உஸ்மான் தாரிக்கின் 'நிறுத்தி' பந்துவீசும் தந்திரத்தில் சூர்யகுமார் (32) சிக்கினார். ஷாகீன் ஷா அப்ரிதி வீசிய கடைசி ஓவரில் ஷிவம் துபே ஒரு பவுண்டரி, ரிங்கு சிங் ஒரு பவுண்டரி, சிக்சர் அடிக்க, 16 ரன் கிடைத்தன. துபே (27) ரன் அவுட்டானார். இந்திய அணி 20 ஓவரில் 175/7 ரன் எடுத்தது.
விக்கெட் மடமட
சவாலான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி, இந்தியாவின் அபார பந்துவீச்சில் அதிர்ந்தது. பாண்ட்யா வீசிய முதல் ஓவரில் சாஹிப்ஜாதா பர்ஹான் (0) அவுட்டானார். பும்ராவின் அடுத்த ஓவரில் அயூப் (6), கேப்டன் சல்மான் அகா (4) வெளியேறினர். 2 ஓவரில் 13/3 ரன் எடுத்து தத்தளித்தது. அக்சர் படேல் 'சுழலில்' அனுபவ பாபர் ஆசம் (5) போல்டாக, 5 ஓவரில் 34/4 என நிலைமை மோசமானது.
பின் உஸ்மான் கான், ஷதாப் கான் சிறிது நேரம் போராடினர். அக்சர் வலையில் உஸ்மான் கான் (44) அவுட்டாக, நிம்மதி பிறந்தது. வருண் சக்ரவர்த்தி வலையில் அஷ்ரப்(10), அப்ரார்(0) வரிசையாக அவுட்டாகினர். பாகிஸ்தான் அணி 18 ஓவரில் 114 சுருண்டு தோல்வி அடைந்தது.
ஆட்டநாயகன் விருதை இஷான் கிஷான் வென்றார்.

