தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்; இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே இன்று தொடங்குகிறது பேச்சுவார்த்தை
தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்; இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே இன்று தொடங்குகிறது பேச்சுவார்த்தை
ADDED : செப் 08, 2025 09:22 AM

புதுடில்லி: இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக சக்தியான இந்தியாவும், ஐரோப்பிய யூனியனும், நெருக்கமான உறவை கொண்டுள்ளன. இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான பேச்சு, கடந்த 17 ஆண்டுகளாக இழுபறியாக இருந்து வந்தது. ஒரு சில விவகாரங்களில் ஒருமித்த கருத்து ஏற்படாததை அடுத்து, 2013ல் இந்த பேச்சு நிறுத்தப்பட்டது. பின், 2022 ஜூனில் மீண்டும் துவங்கியது.
இந்த ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க இருதரப்பும் தீவிரம் காட்டி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த 4ம் தேதி பிரதமர் மோடியுடன் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய கமிஷனின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோருக்கிடையே நடந்த தொலைபேசி உரையாடலில் விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) குறித்த அடுத்த சுற்று பேச்சுவார்த்தை டில்லியில் இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டிற்குள் வர்த்தக ஒப்பந்தத்தை முடிக்கும் இலக்கை நோக்கி விரைந்து செயல்படும் நிலையில், வரி சாரா தடைகள், சந்தை அணுகல் மற்றும் அரசு கொள்முதல் போன்ற அடிப்படை சிக்கல்களில் கவனம் செலுத்த இருக்கின்றனர்.
இந்தியா மீது அமெரிக்க விதித்துள்ள கூடுதல் வரி விதிப்புகளுக்கு மத்தியில், மேற்கொள்ளப்படும் இந்த வர்த்தக ஒப்பந்தம் மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது