ரஷ்யா, சீனாவுடன் இந்தியா நெருக்கமாகும்: டிரம்ப்புக்கு அமெரிக்க முன்னாள் அதிகாரி எச்சரிக்கை
ரஷ்யா, சீனாவுடன் இந்தியா நெருக்கமாகும்: டிரம்ப்புக்கு அமெரிக்க முன்னாள் அதிகாரி எச்சரிக்கை
ADDED : ஆக 09, 2025 04:50 PM

வாஷிங்டன்: '' ரஷ்யா மற்றும் சீனாவிடம் இருந்து இந்தியாவை நகர்த்தும் அமெரிக்காவின் நடவடிக்கையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது,'' என அந்நாட்டு முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கூறியுள்ளார்.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாகக் கூறி இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்நாட்டிலும் சிலர் டிரம்ப்பின் நடவடிக்கையை விமர்சிக்கின்றனர்.
அந்த வகையில் அந்நாட்டின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜான் போல்டன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது: அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிர்பார்த்தது போலவே இந்தியா எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. சீனாவுக்கு வரி விதிக்கவில்லை என்ற ரீதியில் இந்தியா பார்க்கிறது. ரஷ்யாவை பாதிக்க வேண்டும் என்ற வகையில், அமெரிக்கா விதித்த வரியால், ரஷ்யா, சீனாவுடன் இந்தியா நெருக்கமாகும். சீனா மீதான டிரம்ப்பின் கருணையும், இந்தியா மீதான கடுமையான வரிகளும், ரஷ்யா மற்றும் சீனாவிடம் இருந்து இந்தியாவை விலக்க பல தசாப்தங்களாக அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும். சீனாவுக்கு அதிக சலுகை காட்டுவது மிகப்பெரிய தவறு. இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்கா வெளியுறவு கொள்கை நிபுணரும், முன்னாள் வர்த்தக அதிகாரியுமான கிறிஸ்டோபர் படில்லா கூறுகையில், டிரம்ப்பின் வரி விதிப்பு, இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளுக்கு நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வரி விதிப்பு எப்போதும் இந்தியாவின் நினைவில் இருப்பதுடன், அமெரிக்கா நம்பகத்தகுந்த கூட்டாளியா என்ற கேள்வி இருந்து கொண்டே இருக்கும் எனக்கூறினார்.