‛‛பாக்., உடன் விளையாட முடியாது''; இந்திய லெஜண்ட்ஸ் வீரர்களின் உறுதியால் ரத்தான கிரிக்கெட் போட்டி
‛‛பாக்., உடன் விளையாட முடியாது''; இந்திய லெஜண்ட்ஸ் வீரர்களின் உறுதியால் ரத்தான கிரிக்கெட் போட்டி
ADDED : ஜூலை 20, 2025 11:03 AM

பிர்மிங்காம்:
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் ‛வேர்ல்டு சாம்பியன்ஸ் ஆப்
லெஜண்ட்ஸ்' கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத இருந்தன.
இரு நாடுகள் இடையிலான பதற்ற நிலையால் இந்திய வீரர்கள், பாக்., உடன்
விளையாட மறுத்தனர். இதன் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது.
இந்தியா
- பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக நிலவிவரும் அசாதாரண சூழல்நிலை காரணமாக
இருநாடுகளும் நேரடியான விளையாட்டுகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தன. உலக
கோப்பை, ஆசிய கோப்பை போன்ற பல நாடுகள் பங்கேற்கும் தொடர்களில் மட்டும்
மோத வேண்டிய சூழல் ஏற்பட்டால் மட்டுமே இரு அணிகளும் போட்டிகளை
எதிர்கொண்டன. காஷ்மீரின் சுற்றுலா தலமான பஹல்காமில் பாக்.,
பயங்கரவாதிகளின் தாக்குதலால் இரு நாடுகளுக்கு இடையேயான பகை இன்னும்
அதிகரித்தது.
இந்த நிலையில், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து,
ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 6 அணிகளை சேர்ந்த
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் ‛வேர்ல்டு சாம்பியன்ஸ் ஆப்
லெஜண்ட்ஸ்-2025' (WCL) கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் ஜூலை 18 முதல்
ஆக.,2 வரை நடக்கிறது.
இந்திய லெஜண்ட்ஸ்
அணியின் முதல் லீக் போட்டியில் இன்று (ஜூலை 20) பாகிஸ்தான் லெஜண்ட்ஸ்
அணியுடன் மோதுவதாக அட்டவணை தயாரிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இரு நாடுகள்
இடையே நிலவிவரும் அரசியல் பதட்ட நிலைகளை கருத்தில் கொண்டு சுரேஷ் ரெய்னா,
ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், யூசப் பதான் உள்ளிட்ட சில வீரர்கள்
பாகிஸ்தானுடன் விளையாட மறுத்துள்ளனர். இதன் காரணமாக இன்று நடைபெற இருந்த
போட்டி ரத்து செய்யப்படுவதாக WCL அறிவித்துள்ளது.
மன்னிப்பு
‛‛ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்கும் நோக்கிலேயே இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. போட்டியை ரத்து செய்யும் முடிவு பலரது உணர்வுகளைப் புண்படுத்தியிருக்கலாம். ரசிகர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக நாங்கள் ஒருமுறை மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். ரசிகர்களுக்கு சில மகிழ்ச்சியான தருணங்களைக் கொண்டுவருவதே எங்கள் ஒரே நோக்கமாக இருந்தது என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறோம்''என்று WCL தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த போட்டி ரத்து செய்யப்பட்டது, கிரிக்கெட்
ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், நாட்டின்
நலன் கருதி வீரர்கள் எடுத்த இந்த முடிவுக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து
வருகின்றனர்.