ADDED : ஆக 18, 2025 12:32 AM

காத்மாண்டு,: இரண்டு நாள் பயணமாக நேற்று நேபாளம் சென்ற நம் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலியை சந்தித்தார்.
நம் அண்டை நாடான நேபாளத்தின் வெளியுறவு செயலராக அம்ரித் பஹதுார் ராய் உள்ளார். இவரது அழைப்பின் பேரில் நம் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, நேற்று நேபாளம் சென்றார்.
தலைநகர் காத்மாண்டுவில் உள்ள நேபாள பிரதமர் அலுவலகமான சிங்க தர்பாரில், அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலியை சந்தித்து பேச்சு நடத்தினார். உடன், நேபாளத்துக்கான இந்தியத் துாதர் நவீன் ஸ்ரீவஸ்தவாவும் இருந்தார்.
இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது, வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு மற்றும் பிற பிரச்னைகள் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து நேபாளத்தில் உள்ள இந்திய துாதரகம் வெளியிட்ட அறிக்கையில், 'மிஸ்ரியின் இந்த பயணம், இந்தியா மற்றும் நேபாளத்துக்கு இடையேயான வழக்கமான உயர்மட்ட உறவை பிரதிபலிக்கிறது.
மேலும், அண்டை நாட்டிற்கு முன்னுரிமை கொள்கையை உறுதிப்படுத்துகிறது' என குறிப்பிட்டுள்ளது.
பிரதமருடனான சந்திப்பை தொடர்ந்து நேபாள அதிபர் ராமசந்திர பவுடால் மற்றும் வெளியுறவு அமைச்சர் அர்ஸு ரானா தேயுபா ஆகியோரையும் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி சந்தித்தார்.
பயணத்தின் இரண்டாம் நாளான இன்று, நேபாள காங்கிரஸ் கட்சி தலைவர் ஷேர் பஹதுார் தியோபா, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் புஷ்ப கமல் தாஹல் பிரசண்டா ஆகியோரை சந்திக்கிறார்.
நேபாள பிரதமர் சர்மா ஒலி, செப்டம்பர் 16ல் டில்லிக்கு வர உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் இந்த பயணத்தின் போது வெளியுறவு செயலர் மிஸ்ரி விவாதித்தார்.