தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் இந்தியர்; துப்பு கொடுத்தால் ரூ.2.16 கோடி சன்மானம்
தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் இந்தியர்; துப்பு கொடுத்தால் ரூ.2.16 கோடி சன்மானம்
ADDED : ஜன 17, 2025 07:30 AM

வாஷிங்டன்: அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இந்தியர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.2.16 கோடி சன்மானம் வழங்கப்படும் என்று எப்.பி.ஐ., அறிவித்துள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த பத்ரேஷ்குமார் சேத்தன்பாய் படேல்,34, என்பவர் தனது மனைவி பலேக் படேல்,21, அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள டோனட் ஷாப்பில் வேலை செய்து வந்தார். கடந்த 2015ல் பணியில் இருந்த போது, மனைவியை அடித்துக் கொலை செய்துள்ளார்.
விசா காலம் முடிவடைந்ததால், கணவருடன் மீண்டும் இந்தியா திரும்ப பலக் படேல் வலியுறுத்தியுள்ளார். ஆனால், இதற்கு பத்ரேஷ்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது, விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பத்ரேஷ்குமார் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்தனர். ஆனால், கொலைக்கு பிறகு பத்ரேஷ்குமார் தலைமறைவானார்.
இந்த நிலையில், 10 தேடப்படும் முக்கிய குற்றவாளிகளின் பட்டியலில் பத்ரேஷ்குமாரின் பெயரை எப்.பி.ஐ., சேர்த்துள்ளது. அவர் அமெரிக்காவில் உறவினர் வீடுகளில் தங்கியிருக்கலாம். இல்லையெனில் கனடா அல்லது இந்தியாவுக்கு திரும்பி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அவரைப் பற்றி தகவல் கொடுத்தால் இந்திய மதிப்பில் ரூ.2.16 கோடி சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.