இந்தியா - புருனே வர்த்தக உறவு மேம்படும்: பிரதமர் மோடி நம்பிக்கை!
இந்தியா - புருனே வர்த்தக உறவு மேம்படும்: பிரதமர் மோடி நம்பிக்கை!
UPDATED : செப் 04, 2024 06:31 PM
ADDED : செப் 04, 2024 11:19 AM

பந்தர் செரி பெகவான்: புருனே நாட்டு பயணத்தை முடித்துவிட்டு, தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூருக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். 'இந்தியா மற்றும் புருனே நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவு வரும் காலங்களில் இன்னும் மேம்படும்' என பிரதமர் மோடி தெரிவித்தார்.
தென் கிழக்காசிய நாடான புருனேவில் மன்னராட்சி முறை உள்ளது. அந்நாட்டுக்கு அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர், அந்நாட்டு அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
பேச்சுவார்த்தை
புருனே சுல்தான் ஹசனல் போல்கியாவின் இல்லம், உலகின் மிகப்பெரிய அரண்மனை என்ற பெருமையை பெற்றுள்ளது. 20 லட்சம் சதுரடி பரப்பளவில் உள்ள இந்த அரண்மனையில், 1,700 அறைகள் என, அனைத்து வசதிகளும் உள்ளன. இந்த சொகுசு அரண்மனையில், அந்நாட்டு சுல்தான் ஹசனல் போல்கியாவுடன் இந்தியா - புருனே இடையேயான இரு தரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இருநாட்டு உறவுகள்
பின்னர் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், 'சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் பேச்சுக்கள் பரந்த அளவில் இருந்தன. நமது நாடுகளுக்கு இடையே இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளையும் உள்ளடக்கியது. வர்த்தக உறவை மேலும் விரிவுபடுத்த போகிறோம்' என குறிப்பிட்டுள்ளார். இந்த பயணத்தை முடித்து, சிங்கப்பூருக்கு, அவர் புறப்பட்டுச் சென்றார்.
வரவேற்பு
சிங்கப்பூர் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மோடியை நேரில் சந்தித்து வரவேற்றனர். அவருடன் கைகுலுக்கியும், செல்பி எடுத்தும், ஆட்டோகிராப் வாங்கியும் இந்திய வம்சாவளியினர் மகிழ்ந்தனர்.